நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா என்பவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 378 பேர் தேர்வு எழுதிய நிலையில், 356 பேர் தேர்ச்சி பெற்று 94 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதே பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்த ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் மகள் திருநங்கை ஸ்ரேயா (20 வயது) 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
அவர் தமிழ் - 62, ஆங்கிலம் - 56, பொருளியல் - 48, வணிகவியல் - 54, கணக்கு - 58, கணினி - 59 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.