தையல் இயந்திரம் பெற பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு
நாமக்கல், ஜூன் 3-நாமக்கல் மாவட்டத்தில், சமூக நல அலுவலகம் வாயிலாக, விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, இலவச தையல் இயந்திரம் பெற விரும்பும் விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் சமூக நலத்துறை மூலமாக வழங்கப்படுகிறது. இதற்கு, வருமானச் சான்று ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும். இருப்பிடச் சான்று மற்றும் தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6 மாத கால பயிற்சி) ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். வயது சான்று 20முதல் 40 வயது வரை அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச் சான்று, சாதிச் சான்று, கடவுச்சீட்டு அளவு மனுதாரரின் கலர் புகைப்படம் -2. விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்ணாக இருந்தால் அதற்கான சான்று நகல், ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் அதற்கான விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூலை 20 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, ஜூன் 3- சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.5 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்திற்கு 200 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ 6,400 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,900 முதல் ரூ.6,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ 5,400 முதல் ரூ 5,800 வரையிலும் ஏலம்போனது. மொத்தம் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.
தருமபுரியில் வறட்சியால் தென்னை மரங்கள் காய்ந்ததால் விவசாயிகள் கவலை
தருமபுரி, ஜூன் 3-தருமபுரி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தருமபுரி மாவட்டத்தில், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில், மாவட்டத்தில் அணைகளில் மட்டுமின்றி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வறண்டதால் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மரங்களின் குருத்துகள் காய்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு மாவட்டத்தில் சராசரி மழையைவிட குறைந்த அளவே மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து. இதனால், பருத்தி, மஞ்சள், வாழை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்துள்ளன. மேலும், தென்னை மரங்களில் உள்ள மட்டைகள் அனைத்தும் விழுந்து மரங்கள் முற்றிலும் காய்ந்து வருகின்றன. தென்னை மூலம் ஓரளவு மாதந்தோறும் வருவாய் பெற்று வந்த விவசாயிகள் விளைச்சல் இல்லாமலும், மரங்கள் காய்ந்ததாலும் கவலையடைந்துள்ளனர். எனவே, தென்னை விவசாயிகளின் நலன் கருதி, காய்ந்த தென்னை மரங்களைக் கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.