நாகை மாவட்டம் பொரவச்சேரி முஸ்லீம் இளைஞர் தாக்குதல் சம்பவத்திற்கு மக்கள் ஒற்றுமை மோடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், சுப. உதயக்குமார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
வடமாநிலங்களில் தலித் மற்றும்சிறுபான்மை மக்கள் மீது சங் பரிவார் கும்பல் தொடர்ச்சியாக செய்து வரும் கொலைவெறித்தாக்குதல்கள் அன்றாட நிகழ்ச்சியாக மாறிவரும் நிலையில், தற்போது தமிழகத்திலும் இப்போக்கு தீவிரமாகி வருகிறது.
நாகை மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முகமது பைசான் சாலையோரக்கடை ஒன்றில் மாட்டுக்கறி சூப் அருந்தியுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. இந்துக்களில் பலரும் மாட்டுக்கறி சூப் அருந்தி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் முஸ்லிம் என்ற காரணத்திற்காக அவருக்கு இந்து மக்கள் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரை கத்தியால் குத்தி “மாட்டுக்கறி தின்பவனுக்கு இதுதான் தண்டனை” என்று வெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் காலூன்றிட இத்தகைய வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியினரின் இத்தகைய கொடுஞ்செயலை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாக கண்டிக்கிறது. சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக திகழும் தமிழகத்தை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பாழ்படுத்த விரும்பும் சங் பரிவார் கும்பலின் நோக்கத்திற்கு இடம் தராமல் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்துகிறது. இன்று மாட்டுக்கறி உண்ணக்கூடாது என்பவர்கள் நாளை மாமிச உணவே உண்ணக் கூடாது என்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் “ஒரே நாடு, ஒரே உணவு” எனும் ஒற்றைக் கலாச்சாரத்தை திணிக்க முயல்கிறார்கள். இந்த அடாவடிப்போக்கை எதிர்த்து தமிழக மக்கள் கண்டன குரலெழுப்ப வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகிறது.