tamilnadu

img

உப்பங்காடு செல்லும் சாலை, தெருவிளக்கு அமைக்க கோரிக்கை

 சீர்காழி: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே குன்னம் ஊராட்சியைச் சேர்ந்த உப்பங்காடு கிராமத்துக்குச் குன்னம் மெயின் சாலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை மேம்படுத்தப்பட்டு 20 வருடங்களுக்கும் மேலாகிறது. அப்போது தார்ச் சாலையாக்கப்பட்டு பின்னர் இருந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்பங்காடு கிராமத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 150 வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். உப்பங் காடு கிராமத்துக்குச் சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சைக்கிள் மற்றும் இரு சக்கர மோட்டார் பைக்கு களில் பள்ளிகளுக்குச் சென்று வரும் மாணவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் இந்த சாலையின் வழியே நடந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.  குன்னம் மெயின்சாலையிலிருந்து உப்பங்காடு வரை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரு விளக்கு வசதியும் செய்து தரப்படாததால் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் போது மிகுந்த அச்சத்துடன் சென்று  வருகின்றனர். இந்த சாலை அடிக்கடி பாம்புகள் சென்று வரும் இடமாகவும் இருக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உப்பங்காடு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர தார்ச் சாலையை மேம்படுத்தி, இரவு நேரங்களில் அச்சமின்றி செல்லும் வகையில் உடனடியாக தெரு மின்விளக்குகள் பொறுத்த மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.