tamilnadu

நாகப்பட்டினம், புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

புதிய பாலப் பணியால் போக்குவரத்து நெரிசல் 
சீர்காழி, ஆக.12-சீர்காழி அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் உரிய பாதை வசதியின்றி போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே புத்தூரில் பழைய பாளையத்தான் வாய்க்காலில் இருந்த பழ மையான பாலம் இடிக்கப்பட்டு கடந்த சில தினங்களாகப் புதிய பாலம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் தடையின்றி சென்று வரும் வகையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மிகவும் குறுகியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சிதம்பரத்திலிருந்து சீர்காழி மார்க்கமாக சென்று வரும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, பேருந்துகள் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று சேர முடியவில்லை. இதனால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களும் மணிக்கணக்கில் நின்று தான் செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இதனால் தினந்தோறும் தொடர்ந்து போக்குவரத்து பிரச்சினை ஏற்படுகிறது. வினாடி நேரம் கூட ஓய்வின்றி வாகனப் போக்கு வரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் எந்த நேரமும் நிறுத்தப்பட்டு காலம் தாழ்த்தியே செல்கின்றன. நோயாளிகளை அவசரமாக ஏற்றிச் செல்லும் 108 ஆம்புலன்சும் மிகுந்த சிரமத்துடனேயே காலம் தாழ்த்தி செல்கின்றன. எனவே பாலம் கட்டும் பணி நிறைவு பெறும் வகையில் தற்காலிக பாதையை அகலமாக அமைத்து போக்கு வரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்கச் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளியில்தான் குழந்தைகளை சேர்ப்போம்
புதுக்கோட்டை,ஆக.12-  தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளியில்தான் சேர்ப்போம் என்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒரே ஒரு மாணவருடன் செயல்பட்டு வந்தது.இந் நிலையில் பள்ளி மூடப்பட்டு நூலகமாக மாற்றும்பணி நடை பெற இருந்தது. இதை தடுக்க கிராம மக்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளைக் கட்டாயம் தொடக்கப்பள்ளி யில்தான் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.