சீர்காழி: நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியில் பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வரும் பிரதான வாய்க்கால் பொறை வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் மூலம் கொள்ளிடம் கடைமடை பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் பாசன மற்றும் வடிகால் வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் குடிமராமத்து பணியின் கீழ் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெட்டி தூர்வாரப்பட்டது. ஆனால் இந்த பொறை வாய்க்கால் எடமணல் கிராமத்தில் உள்ள 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கதவணையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வெட்டி தூர்வாரப்படாமலும் கரையை பலப்படுத்தாமலும் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொறை வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. எடமணலில் உள்ள கதவணை பழுதடைந்து இருந்தாலும் கரைகளை முறையாக பலப்படுத்தாமல் விட்டதால், வாய்க்காலில் பெருக்கெடுத்து வந்த தண்ணீர், எடமணல் கிராமம் பொறை வாய்க்காலில் ஏழு இடங்களில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிவேகமாக வெளியேறி வயலுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம், கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன், வேளாண் அலுவலர் விவேக், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சக்திவேல், வி.ஏ.ஓ அருள்பெருமாள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு செவ்வாயன்று நேரில் வந்து உடைந்த கரைப்பகுதியை மணல் மூட்டைகளை கொண்டு அடைத்தனர். மேலும் பழமையான கதவணையில் திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டிருந்த ஒரு இரும்புக் கதவையும் உடைத்து தண்ணீரை வெளியேற்றினர்.