tamilnadu

img

பெரியாறு அணைக்கு தரை வழி மின்சாரம்... தமிழக -கேரள அதிகாரிகள் ஆய்வு....

தேனி:
முல்லைப்பெரியாறு அணைக்கு தரைவழியாக மின்சாரம் வழங்குவது தொடர்பாக கேரள -தமிழக அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

முல்லைப்பெரியாறு அணைப்பகுதிக்கு வல்லக்கடவு பகுதியிலிருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 2000-ல் இப்பகுதிவழியாகச் சென்ற உயரழுத்த மின்கம்பி உரசியதில், காட்டுயானை ஒன்று உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 19.06.2000 முதல் பெரியாறு அணைப்பகுதிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. அன்று முதல் பெரியாறு அணைப்பகுதியில் சோலார் மின் விளக்குகளும், ஒலிகுறைவான ஜெனரேட்டரும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதற்கு மாற்று ஏற்பாடாக, வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின் கம்பிகளை வனப்பகுதியில் தரைவழியாகக் கொண்டு செல்ல தமிழக பொதுப்பணித்துறை கேரள அரசிடம் அனுமதி கேட்டது. அதற்கான செலவாக 1 கோடியே 66 லட்சம் ரூபாயை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு கேரள மின்வாரியத்திற்கு செலுத்தியது. ஆனால் கேரள வனத்துறை அனுமதி தராததால் பணி கால தாமதப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் பெரியாறு அணைக்கு தரைவழியாக மின்சாரம் கொண்டு செல்வது குறித்து தமிழக - கேரள பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் செவ்வாயன்று வல்லக்கடவு முதல் பெரியாறு அணை வரைஆய்வு செய்தனர். தமிழக அரசு சார்பாக கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின், தமிழக மின்வாரிய செயற்பொறியாளர் சுஜாதா உட்பட அதிகாரிகளும், கேரளா சார்பில் கேரள மின்வாரிய உதவி முதன்மை பொறியாளர் மனோஜ், செயற்பொறியாளர் பார்வதி, அசிஸ்டன்ட் பீல்டு டைரக்டர் விபின் தாஸ், முல்லைப் பெரியாறு காவல்நிலைய டிஎஸ்பி நந்தன்பிள்ளை மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  பின்னர் இதுகுறித்து பெரியாறு அணை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்லும் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட் டுள்ளது, அதனால் தரைவழி மின்சாரம் கொண்டு செல்லக்கூடிய பகுதிகளை இருமாநில அதிகாரிகள் இணைந்து ஆய்வு செய்ததாகவும், இன்னும் ஒருசில நாட்களில் இதற் கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.