tamilnadu

img

10 ஆண்டுகளாக இருளில் தவிக்கும் கிராமத்திற்கு அடிப்படை வசதி செய்து தருக...

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சிஒன்றியம் அயன் விருசம்பட்டி ஊராட்சி மாமுநயினார்புரம் கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த ஊரின் கிழக்குப் பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதை அருகே 10 க்கும் மேற்பட்டகுடும்பங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் அரசின் பசுமைவீடுகளும் உள்ளன.10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இந்தவீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. மின் இணைப்புகேட்டு பல முயற்சிக்கு பிறகு  மின்கம்பங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் தனிநபர் ஒருவரால் தடுக்கப்பட்டு இன்று வரை நடப்படவில்லை. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் மண்ணெண்ணெய் விளக்கு துணை கொண்டே படிக்கும் சூழ்நிலை உள்ளது.

மேலும் இவர்களது வீடுகளுக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் மழை காலங்களில் மழை நீரில் நீந்திச் செல்லும் நிலை தான் உள்ளது.மேலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.எனவே இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பு மற்றும்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சிஅலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இப்பிரச்சனை தீர்க்கப்படாத பட்சத்தில் அக்டோபர் 14 ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், ஜோதி மற்றும் மாமுநயினார்புரம் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.