tamilnadu

வியாபாரி கடத்தி கொலை: சிபிசிஐடி விசாரணை

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி செல்வன் (32) கொலை தொடர்பாக, தட்டார்மடம் போலீஸ்இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் ஆகியோர் உள்பட சிலர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.சி.பி.சி.ஐ.டி. போலீசார் தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, திசையன்விளை பகுதிகளில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்தேவி தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை தட்டார்மடம் அருகே கொழுந்தட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு செல்வன் கடத்தப்பட்ட இடத்தில் இருந்து, அவரது உடல் கிடந்த கடக்குளம் காட்டுப்பகுதி வரையிலும் உள்ள தூரத்தை அளவீடு செய்தனர். தொடர்ந்து பல்வேறுஇடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல், அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோவில்பட்டி நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்ய உள்ளனர்.