தூத்துக்குடி, மே 18- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 40 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 38 பேர் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் சென்னையிலிருந்து வந்தவர்கள். மீதமுள்ள 2 பேரில் ஒருவர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர். கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர். மற்றொருவர் திருச்செந்தூரை சேர்ந்தவர். அவர்கள் எங்கு சென்றனர், யாரை சந்தித்தார் என்ற விபரம் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் 9 உள்ளது. 700 படுக்கை வசதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் மட்டும் பொதுமக்கள் சென்று வரலாம். வெளி மாவட்டம், மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம். வெளியே வரும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். அரசு ஊழியர்கள் பணிக்கு வர 11 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. வட மாநில தொழிலாளர்கள் 1200 பேர் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஞாயிறன்று 526 பேர் உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நெல்லையிருந்து பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பீகார், உத்தரப்பிரதேசத்திற்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 12 தனிமைப்படுத்தும் பகுதிகள் உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் சென்று வர இ-பாஸ் மூலம் விண்ணப்பிக்கலாம். தனிமைப்படுத்தும் பகுதிகளிலுள்ள மாணவர்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பேருந்து வசதி செய்யப்படும். காய்ச்சலை தானாகவே கண்டறியும் கருவி ஆட்சியர் அலுவலகத்திலும், கோவில்பட்டி சோதனை சாவடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை செய்யும் போது காய்ச்சல் கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்த ப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.