tamilnadu

img

பள்ளி வேனை ஓட்டிய போது திடீர் மாரடைப்பு 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் நீத்த ஓட்டுநர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-புன்னக்காயல் சாலை பகுதியில் வசித்தவர் மோகன்ராஜ்(45). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்து 

வந்தார். புதனன்று காலை இவர் வழக்கம்போல் ஆத்தூரில் இருந்து பள்ளி வேனில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் 21 மாணவ - மாணவிகள் மற்றும் 2 ஆசிரியைகள் இருந்தனர். ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரைக் கடந்து காமராஜபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென்று மோகன்ராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வேனின் வேகத்தை குறைத்தவாறு, இடதுபக்கமாக வேனை திருப்பிய நிலையில், ஸ்டீயரிங் மீது மயங்கி விழுந்தார்.அப்போது சாலையின் இடதுபுறமாக இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது வேன் மோதி நின்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வேனில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். வேனில் மயங்கிய நிலையில் கிடந்த மோகன்ராஜை அக்கம்பக்கத் தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

சுற்றுச்சுவர் மீது மோதியதில் பள்ளி வேனில் இருந்த 6 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாரடைப்பில் உயிரிழந்த மோகன்ராஜின் உடலை ஆறுமுகநேரி போலீசார் பரிசோத னைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோகன்ராஜூக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, சிரமத்துடன் மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளார். உயிருக்கு போராடிய நிலையிலும் வேனின் வேகத்தை குறைத்து இடது பக்கமாக திருப்பியதால், எதிரே வந்த வாகனங்களின் மீது வேன் மோதி விபத்துக்கு உள்ளாவதை தவிர்த்தார். தொடர்ந்து சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்ம் மீதும் வேனை மோதவிடாமல் போராடி இருக்கிறார். அவர் சுயநினைவு இழந்த நிலையில் வேன் சாலையோரத்தில் இருந்த வீட்டின் சுற்றுச் சுவரில் மோதி நின்றது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தன்னுடைய உயிர் பிரியும் தருவாயிலும் வேனில் இருந்த மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்ற போராடிய ஓட்டுநரை பொதுமக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர். இறந்த வேன் ஓட்டுநர் மோகன்ராஜூக்கு சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள செல்வன்புதியனூர். இவருக்கு சுப்புலட்சுமி (35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;