tamilnadu

கொரோனா பாதிப்பால் 2 பெண்கள் பலி தூத்துக்குடியில் பலி 7 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடி, ஜூன் 24- தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் புதனன்று 2 பெண்கள் உயிரிழந்தனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கோவில்பட்டியை சேர்ந்த 56 வயது மதிக்கதக்க பெண் சில தினங்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்புடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சிகிச்சை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது உடல் மோசமடைந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு புதனன்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுபோல் திருவைகுண்டம் அருகேயுள்ள அனியாபரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது பெண் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் 22 அன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி புதனன்று மதியம் உயிரிழந்தார்.  கொரோனா தொற்றால் இறந்த 2 பெண்களின் உடல்களும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தூத்துக்குடி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

;