tamilnadu

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு

திருவள்ளூர் மார்ச் 18- திருவள்ளூர் அருகே அனுமதியின்றி விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் புதைக்க முயற்சிக்கும்  ஐஓசி எல், எண்ணை நிறுவனத்தின் அத்துமீறலை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி வரை ஐஓசி எல்  எண்ணை நிறுவனம் சார்பில் 900 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் புதைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம். நெய்த வாயில். நாலூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எரிவாயு குழாய் புதைக்கப்பட உள்ளது.  இதற்கு அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஐஓசி எல் எண்ணை நிறுவனத்தின் இந்த அத்துமீறலை கண்டித்து மேட்டுப்பாளையம் கிராமத்தில் விவசாயிகள் மார்ச்.17 அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது  விளைநிலங்களில் எரிவாயு குழாய் புதைத்தால் மண்வளம் கெட்டு விடும்.இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே மத்திய மாநில அரசுகள் எரிவாயு குழாய் புதைக்கும் திட்டத்தை மாற்றுப்பாதையில் காட்டுப்பள்ளியில் இருந்து பஞ்சட்டி வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் வரை அமைக்கப்படவுள்ள நான்கு வழிச்சாலை வழியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய விவசாயிகள் தங்களின் கோரிக்கை ஏற்கப்படா விட்டால் எரிவாயு குழாய் புதைக்கும் பணியை தடுத்து நிறுத்துவதோடு சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.