tamilnadu

சர்க்கரை ஆலையில் களவுபோகும் பொருட்கள்  கண்டுகொள்ளாத காவல்துறை

 திருவள்ளூர், ஜூலை 31-  திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ளது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் அரசின் முதலீட்டில் இயங்குகிறது. இரும்பு கேட் வால்வு, நூறு அடி காப்பர் பிளேட், 7.5 எச்.பி மோட்டார்- 5 மற்றும் 10 எச்.பி மோட்டார் 2, காப்பர் பேரிங் 25 ஆகிய வகையான பொருட்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.12 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து ஆலை நிர்வாகம், திருவாலங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. ஆனால் இது வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்பட வில்லை. சர்க்கரை ஆலையில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடை பெற்று வருகிறது. இதுவரைக்கும் காவல்துறை விசாரணை நடத்தாமல் உள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பெருமாள், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புதனன்று ( ஜூலை 31) மனுவை அளித்துள்ளார்.  இந்த சத்திப்பின் போது, மாவட்ட நிர்வாகிகள் பி.பாபு, ஸ்ரீநாத், கோதண்டன், ஸ்ரீராமுலு, பாலசுப்பிரமணி, கோவிந்தராஜூலு ஆகியோர் உடனிருந்தனர்.