tamilnadu

மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர்,ஏப்.24-திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அறிவிப்பில்லாத மின்தடை மற்றும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியவர்கள், குழந்தைகள் புழுக்கத்தாலும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறைபுகார் அளித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து புதனன்று (ஏப்.24) அப்பகுதிமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், மின் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டோர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் உடனடியாக அப்பகுதிக்கு புதிய மின் மாற்றியை அமைப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

;