tamilnadu

குடிமனைப்பட்டா கேட்டு வேட்டைக்காரன் இனமக்கள் கோட்டாட்சியரிடம் முறையீடு

திருவள்ளூர், பிப். 26- திருவள்ளூர் அருகில் உள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் வாழும் வேட்டைக்காரன் இன மக்கள் அனைவருக்கும் குமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியினர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் செவ்வாயன்று (பிப்.25) மனு அளித்தனர். திருவள்ளூர் அருகே உள்ள விளாப்பாக்கம் கிராமத்தில் வேட்டைக்காரன் இன மக்கள் கடந்த 50-ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்டோர்  குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளனர். ஆதார் அட்டை, ரேசன் அட்டை போன்றவற்றையும் கொடுத்துள்ளனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு குடிமனை, பட்டா ஆகியவற்றை வழங்க வேண்டும் என பல முறை மனுக்கள் கொடுத்துள்ளனர். வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து குடிமனை மற்றும் பட்டா கேட்டு  பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. மீண்டும் 2016-ல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்-22 அன்று கிராம நிர்வாக அதிகாரி குடியிருக்கும் மனைகளை அளந்து வெறும் 6 நபர்களுக்கு மட்டும் 3 செண்ட் வீதம் பட்டா வழங்கியுள்ளனர்.அரசாணைப்படி இங்கு குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு தலைமையில் திருவள்ளூர் ஆர்டிஒ-வை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆர்டிஒ மாற்று இடத்தில் குடிமனை மற்றும் பட்டா வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியினர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, அகில இந்திய ஆதிவாசிகள் சங்கத்தின் தேசிய மேடை அமைப்பின் நிர்வாகி ஏ.வி.சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.