tamilnadu

img

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் பி.ஜி.ஆர் நிறுவனம்

திருவள்ளூர், ஆக. 19-  திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் அமைத்ததற்காக 13 தொழிலாளர்களை  நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி பல்வேறு தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பின்னர் வட்டாட்சியர், பொன்னேரி கோட்டாட்சியர் முன்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.  அதில் அளித்த உறுதியை நிர்வாகம் நிறை வேற்றவில்லை. தொழிலாளர் நல ஆணையர் தலையிட்டும் பி.ஜி.ஆர் நிர்வாகம் மதிக்கவில்லை.  இந்நிலையில்,  அதிகாரிகள் ஒப்புக்கொண்ட படி மீண்டும் பணி வழங்க வேண்டும், சட்ட விரோதமாக வெளி ஆட்களை கொண்டு வேலை செய்வதை தடுக்க வேண்டும், பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தச்சூர் கூட்டுச்சாலையில் திங்களன்று (ஆக.19) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொன்னேரி பகுதிச் செயலாளர் இ.தவமணி தலைமையில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அன்பழகன், அரிவழகன், கமல, மதன் ஆகி யோர் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி மீண்டும் வேலை வழங்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் வில்சன், பிஜிஆர் நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி தொழிற்சாலையில் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்ட வர்களை வெளியேற்றினர். பிறகு தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப்பேசினர்.  முதல் கட்டமாக 114 தொழி லாளர்களை பணியில் அமர்த்தவும் அதன்பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட 13 தொழிலாளர்கள் குறித்து பேச்சு நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்று  செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்த தொழிலாளர்கள் கீழே இறங்கி வந்தனர். ஆனால் கோட்டாட்சியர் யோசனையை அமல்படுத்த நிர்வாகம்  மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது.  இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன்,  பொருளாளர் என்.நித்தியானந்தம், துணை நிர்வாகிகள் எஸ். எம்.அனீப், ஜி.விநாயகமூர்த்தி, பி.நடேசன், ஆர்.பூபாலன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால்,  சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஜெ.அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.