திருவனந்தபுரம்:
16 விவசாய விளைபொருள்களுக்கு கேரள அரசாங்கம் அடிப்படை விலை நிர்ணயம் செய்திருக்கிறது. விலைவாசி ஏற்ற இறக்கத்திலிருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்காக, இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமையன்று இதுதொடர்பாக பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:
மாநிலத்தில் சுமார் ஒரு லட்சம் டன்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள் உற்பத்தியாகும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இவற்றை உற்பத்தி செய்திடும் விவசாயிகளை இப்பொருள்களின் விலைவாசி ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுபோன்று நாட்டில் முதன்முதலாக கேரளாவில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்தத்திட்டத்தின் மூலமாக இப்பொருள்களுக்கு அடிப்படை விலை நிர்ணயிப்பதன் மூலம், இப்பொருள்களை உற்பத்தி செய்துவரும் பாரம்பரிய விவசாயிகளையும், புதிதாக நிலத்தில் விவசாயம் செய்திடும் விவசாயிகளும் பாதுகாக்கப்படுவதுடன் தேவையான ஆதரவும் அளிக்கப்படும்.நாட்டில் இதர மாநிலங்கள் அனைத்திலும் விவசாயிகள் வீதிக்கு வந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், கேரள அரசு மட்டும் விவசாயிகளைப் பாதுகாத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்காக கேரள அரசு கடந்த நான்கரை ஆண்டு காலமாகவே பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் இவ்வாறு விவசாய விளைபொருள்களுக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்வதும் ஒன்றாகும். இதில் 16 விளைபொருள்கள் முதற்கட்டமாகக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
மரவள்ளிக் கிழங்கு, நேந்திரம் பழம், அன்னாசிப் பழம், பாகற்காய், வெள்ளரி, புடலங்காய், பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி, முட்டைக்கோஸ், பீன்ஸ், பீட்ரூட், கேரட், உட்பட 16 காய்கறிகள் இதில் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.இவற்றுக்கு மாநில அரசு, அதன் உற்பத்திச் செலவினத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிக விலையை நிர்ணயம் செய்து, அடிப்படை விலை நிர்ணயம் செய்திருக்கிறது. சந்தையில் இக்காய்கறிகளின் விலை, அரசு நிர்ணயம் செய்த அடிப்படை விலையைவிட குறைந்தால், காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து அரசு தான் நிர்ணயம் செய்துள்ள அடிப்படை விலைக்குக் கொள்முதல் செய்துகொள்ளும். இதற்கான பணம், விவசாயியின் கணக்கிற்கு அனுப்பப்படும். விவசாய விளைபொருளுக்கான அடிப்படை விலை அதன் தரத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்படும். அவ்வப்போது அடிப்படை விலையை மாற்றியமைப்பதற்கும் வகை செய்யப்பட்டிருக்கிறது.உள்ளாட்சி அமைப்புகளும் கூட்டுறவுத் துறையும் இணைந்து திட்டத்தை அமல்படுத்தும். விளைபொருட்கள் விஎப்பிசிகே, ஹார்டிகார்ப் மற்றும் மொத்த சந்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்படும். ஒரு பஞ்சாயத்தில் குறைந்தது ஒரு சந்தைப்படுத்தல் மையம் திறக்கப்படும். முதல் கட்டமாக 250 மையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும். ஒரு பருவத்தில் விவசாயிக்கு 15 ஏக்கர் நிலத்தின் பயன் மட்டுமே கிடைக்கும்.சந்தை விலை அடிப்படை விலைக்குக் கீழே குறையும் போது, பணம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முதன்மை குழுக்களுக்கு கிடைக்கும். இதற்காக, உள்ளாட்சி மன்ற தலைவரை தலைவராகவும், முதன்மை வேளாண் கூட்டுறவு சங்கத்தின் தலைவரை துணைத் தலைவராகவும் கொண்ட குழு அமைக்கப்படும். விளைபொருட்கள் ‘ஜீவனி- கேரள பண்ணை புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்’ என்ற பெயரில் விற்கப்படும். காய்கறிகளின் சந்தை விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் குறைந்தபட்ச விலையைப் பெறுவது விவசாயிக்கு பெரும் நிம்மதியாக இருக்கும். இது விவசாயத்திற்கு அதிக மக்களை ஈர்க்கும் என முதல்வர் தெரிவித்தார்.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.இந்தத் திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், காய்கறிகளைக் கொள்முதல் செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் முக்கியப் பங்காற்றும்.இத்திட்டத்தில் விவசாயிகள் இதற்காக வேளாண்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள தளத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். தங்கள் விவசாய விளைபொருள்களை அப்பொருளின் அடிப்படை விலையின் அடிப்படையில் காப்பீடும் செய்துகொள்ளலாம். இதற்கான பதிவு வரும் நவம்பர் 1 அன்று தொடங்குகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் விவசாயப் பொருள்களைப் பாதுகாப்பதற்காக குளிர்பதன வசதிகள் மற்றும் குளிர்பதன வசதிகளுடன் கூடிய வாகனங்கள் வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
16 வகை காய்கறி, பழங்களுக்கு குறைந்தபட்ச விலை:
நேந்திரன் பழம்/ வயநாடு- ரூ.30/24, உருளைக் கிழங்கு- 20, காரட்- 21, மரவள்ளி கிழங்கு- 12, வெண்டை- 20, வெள்ளை பூசனி- 9, பாவக்காய்- 30, தக்காளி- 8, அன்னாசி- 15, பூண்டு- 139, புடலங்காய்- 30, வெள்ளரி- 8, வெங்காயம்- 11, பீட்ரூட்- 21, பீன்ஸ்- 28, பயிறு- 34 (ந.நி.)