திருவண்ணாமலை, மார்ச் 11- திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே, அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என, மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை நகரம், மத்திய பேருந்து நிலையம் அருகே அம்பேத்கர் தெரு அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசு நிர்வாகத்தால் பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி என்று, எங்கள் பகுதி அறி விக்கப்பட்டுள்ளது. எங்கள் குடியிருப்பு பகுதியில், தனிநபர் ஒருவரின் சுயநலத்திற்காக தனியார் தொலைபேசி நிறுவனத்தின் உயர் அழுத்த கோபுரம் அமைக்க பணிகள் துவங்கியுள்ளது. இத்தகைய கோபுரம் அமைவதால் ஏற்படும் அறிவியல்பூர்வமான பாதிப்புகள் பற்றி நாங்கள் அறிந்துள்ளோம். அந்தவகையில் இந்த கோபுரம் அமைந்தால் எங்கள் குடியிருப்பு பகுதி, நோயாளிகளின் கூடாரமாக மாறும் என்று எங்கள் பகுதி மக்கள், அச்சப்படுகின்றனர். மேலும், இரும்பு உபகரணங்களால் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல், அமைக்கப்படும் இந்த கோபுரத்தால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும். எனவே, ஏழை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, தனியார் நிறுவன உயரழுத்த கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.