சாலை விபத்தில் 2 பேர் பலி
மதுராந்தகம், அக்.14- திருவண்ணாமலை மாவட்டம், சின்னவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாண்டவராயன். இவரது மகன் ராஜா (40). கொத்தனாரான இவர் திங்களன்று பணி முடித்து வீட்டிற்கு மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து- திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ராஜா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜா சம்பவ இடத்தி லேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ராஜா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இதேபோல், மதுராந்தகம், குடும்பி தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (63). இவர் திங்களன்று (அக்.14) வீட்டிலிருந்து கருங்குழி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கேரளாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
மதுராந்தகம், அக்.14- காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கீழ்கரணை கிராமத்தைச் சார்ந்தவர் கெங்கன். இவரது மகன் கனகராஜ் (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கனகராஜை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மணல் திருடிய ஆறு பேர் கைது
மதுரை, அக்.14-மேலூர் காவல் துறையினர் ரோந்து சென்றபோது தும்பைபட்டி பெரிய ஓடையில் மூன்று டிப்பர் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக் கொண்டிருந்த அஜ்மீர் காஜா, முத்துராசு, ரமேஷ் , கார்த்திக் குமார் ஆகியோரைக் கைது செய்து மணலுடன் மூன்று டிப்பர் லாரிகளையும் பறி முதல் செய்தனர். மணல் கீழவளவு காவல்துறையினர் தனியாமங்கலம் அருகே உரிய அனுமதியின்றி மணலுடன் வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து மீரா ஹூசைன், அய்யாவு ஆகிய இரு வரைக் கைது செய்தனர். சேடபட்டி காவல்துறையினர் சிவனதபுரம் கண்மாயில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய தங்கவேல், முருகன் ஆகியோரைக் கைது செய்து, மணல், ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.