திருவண்ணாமலை, நவ.5- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில், அரியாத்தூர் கிராமத்திலிருந்து போளூருக்கு செல்லும் சாலையில், வம்பலூர், கரியாத்தூர் உள்ளிட்ட 4 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருவ தற்காக, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழைக்காலமாக இருப்பதால், சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை கிராம மக்கள் கோரிக்கை தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த 4 கிராம மக்கள், ஆரணி - போளூர் சாலை, வடமதிமங்கலம் கூட்டு சாலையில், மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி காவல்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.