திருவண்ணாமலை, 27- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெல்லியாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (60). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே கிராமத்தில் உள்ளது. அதில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். துரைசாமி, கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது, அருகே உள்ள ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான வயலை கடந்து சென்றுள்ளார். அப்போது நெல் பயிருக்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கிய துரைசாமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து துரைசாமியின் மனைவி சரோஜா,கீழ்கொடுங்கலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையின் விவசாய நிலத்தில் பயிர் செய்து வந்த அவரது சகோதரர் வெங்கடேசன் ( 42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.