திருவண்ணாமலை, அக்.12- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டையை சேர்ந்த தஸ்தகீர் மகன் ரசூல்( 16). இவர் பழம் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற சிறப்பு வகுப்பிற்கு வந்த ரசூல் மீது, புகார்கள் வருவதாகவும், இதனால் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து, வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ரசூல் பள்ளியின் தடுப்புச் சுவர் ஏறி குதித்து ஓட முயற்சி செய்துள்ளார். இதில் நிலைதடுமாறிய ரசூல் தரையில் குதித்ததும் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து, ரசூலை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், ரசூலின் உறவினர்களிடமும், ஆசிரியர்களிடமும் சுமூக பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.