நாளை பல்லடம் சாலையில் போக்குவரத்துக்குத் தடை
திருப்பூர், மே 21 –மே 23ஆம் தேதி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்குகள் எண்ணப்படும் எல்ஆர்ஜி கல்லூரி பகுதியின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு அன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் சாலை சந்தைப்பேட்டை முதல் வித்யாலயம் வரை வர்த்தக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதேபோல் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் கட்சியினர் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திற்குள்ளும், காவல்துறை, அரசு வாகனங்கள் மற்றும் வேட்பாளர் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நிறுத்த வேண்டும். எல்ஆர்ஜி அரசு பெண்கள் கல்லூரி முன்பும், பல்லடம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என்றும் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை
அதேபோல் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.கயல்விழி செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மக்களவை தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது கட்சி ரீதியாகவும், சாதிரீதியாகவும், மதரீதியாகவும் வெளியூர் நபர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்குவதற்கு வரலாம். எனவே தங்கும் விடுதி உரிமையாளர்கள் திருமண மண்டப உரிமையாளர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியூர் நபர்களை தங்க வைக்க வேண்டாம். சந்தேகப்படும் வகையில் யாராவது தங்கியிருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 மற்றும் திருப்பூர் மாவட்ட தனிப்பிரிவு 0421 – 2970017, 94981 01320 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முதுகலை மாணவர் தற்கொலை
தாராபுரம், மே 21 -தாராபுரத்தில் முதுகலை மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தாராபுரம் என்.என்.பேட்டை வீதி, வளையக்கார தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (63). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் கவின்குமார் (22.) தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இந்நிலையில் திங்களன்று வழக்கத்திற்கு மாறாக நேரத்திலேயே அவரது அறைக்கு தூங்க சென்றார். சந்தேகமடைந்த முத்துசாமி சென்று பார்த்தபோது கவின்குமார் தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கவின்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.