அவிநாசி, மே.2- அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மையின்றி காணப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவிநாசி-சேவூர் சாலை அருகே வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை ஆகியவை உள்ளது. இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அலுவலகங்களில் பயன்படுத்திய காகிதக் குப்பைகள் மற்றும் பாக்குமட்டை தட்டுகள், தின்பண்டங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன. மேலும் காலி மதுபாட்டில்களும் கிடக்கின்றன. இந்தக் குப்பைகள் பல நாட்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுகின்றன. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிப்பிடம் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.