அவிநாசி ஏப்.18 – அவினாசி பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதால் பெரும் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.
அவிநாசி ஒன்றியத்தில் நான்கு சக்கர மினி லாரி, பயணிகள் ஆட்டோக்கள், டூரிஸ்ட் வேன், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகன போக்குவரத்தை நம்பி சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர்களது வாழ்வாதாரம் என்பது அன்றாடும் வெளி மாவட்டங்கள் பல்வேறு நகரப் பகுதிகளுக்கு செல்வதின் மூலம் தினசரி ரூ.500 முதல் 1500 வரை வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. இதன் மூலமாக தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மோட்டார் வாகன தொழிலாளர்கள் வேறு மாவட்டங்களுக்கும் . நகரத்தின் மற்ற பகுதிகளுக்கும் செல்ல முடியாததால், வருவாய் இழப்பு ஏற்பட்டு குடும்பத்துடன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து சிஐடியு சங்கத்தின் நிர்வாகி ரமேஷ் கூறுகையில் ,
மோட்டார் வாகன தொழிலாளர்கள் வாழ்வாதாரம் என்பது மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அரசு தருகிற நிவாரணத் தொகை என்பது போதுமானதாக இல்லாததால் வாழ்க்கை நடத்துவதே மிகவும் வேதனையாக மாறியுள்ளது. உதாரணமாக, ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் நான்கு பேர் இருப்பார்கள். அரசு தருகிற நிவாரண தொகையோ, உணவுப் பொருட்களோ அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக இல்லை. இதே நிலை நீடித்தால் , தொழிலாளியின் வாழ்வாதாரம் கேள்விக்குறிதான். ஆகவே, நிவாரணத் தொகையை உயர்த்தி உடனடியாக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதேபோல், ஆட்டோ தொழிலாளி இளங்கோ என்பவர் கூறுகையில்,
நாங்கள் கிராமப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறோம். தினசரி ரூ.500 முதல் 700 வரை கிடைக்கும் வருவாயை வைத்துக்கொண்டு. குடும்பத் தேவைகளான மளிகை பொருட்கள், குழந்தைகள் படிப்பு செலவு, மருத்துவச் செலவு உள்ளிட்டவைகளை ஒரளவிற்கேனும் பூர்த்தி செய்து வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். அதுவும் எங்களுக்கு வாடகை என்றால் அருகில் உள்ள கிராமப் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிகள் ஆட்டோவை நாடி வந்தனர். தற்பொழுது வைரஸ் தொற்று காரணமாக சொந்த மாநிலத்திற்கு சென்றுவிட்டனர். மீண்டும் தமிழ்நாடு வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பினாலும், ஆட்டோ கடன் மாதம் 8 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். வாகனத்தை சீரமைக்க வேண்டும் போன்ற அடுத்தடுத்த நெருக்கடிகளால் எதிர்கால வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகி உள்ளது என வேதனையோடு தெரிவித்தார்.
ஆகவே வாகன கடன் பெற்றவர்களின் மூன்று மாத கால தவணைத் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும். அடமானத்தில் வைத்திருந்த நகையின் வட்டியினை முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும். பள்ளிக்கூடம் திறந்த பின்பு குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் , சீருடை முதல் நோட்டுப் புத்தகம் முதல்கொண்டு இலவசமாக தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே வாகன தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் எதிர்பார்பாகவும் .
- அருண்.