திருப்பூரில் பனியன் கம்பெனி வாயில் முன்பு இடையூறாக பல மணி நேரம் காரை நிறுத்திச் சென்றது குறித்து கேள்வி கேட்டதால் அந்த கம்பெனி உரிமையாளர் மற்றும் அவர் தம்பி மீது பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் மகன் அடியாட்களை அழைத்து வந்து அராஜகமான முறையில் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினார்.
திருப்பூர் பி.என்.ரோடு கிச்சப்பன் மருத்துவமனை அருகில் அமராவதி நிட்டிங் என்ற பனியன் நிறுவனத்தை எஸ்.வேலுச்சாமி என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை அடையாளம் தெரியாத யாரோ கம்பெனி நுழைவாயிலுக்கு இடையூறாக பிஎம்டபிள்யூ சொகுசுக் காரை நிறுத்திச் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக அந்த கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பனியன் கம்பெனிக்கு சரக்கு ஏற்றுவதற்காக வந்த வேனை உள்ளே கொண்டு வர முடியாமல் வெளியே நிறுத்தி சிரமப்பட்டு சரக்குகளை ஏற்றி அனுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் மாலை சுமார் 5 மணியளவில் சொகுசு காரை எடுப்பதற்காக ஒருவர் வந்திருக்கிறார். அவரிடம் கம்பெனிக்கு இடையூறாக பல மணி நேரம் காரை நிறுத்திச் சென்றது பற்றி வேலுச்சாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு முறையாக பதிலளிக்காமல் நான் அப்படித்தான் காரை நிறுத்துவேன் என்று திமிராக கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
பின்னர் காரை எடுத்துச் சென்ற நபர் சிறிது நேரம் கழித்து சுமார் 10 பேர் கொண்ட கும்பலுடன் வந்து கம்பெனிக்குள் நுழைந்து கம்பெனி உரிமையாளர் வேலுச்சாமியையும், அவரது தம்பி பழனிச்சாமியையும் சரமாரியாகத் தாக்கினர். ரீப்பர் கட்டை மற்றும் கைகளால் தாக்கியதுடன், ஆபாசமாக வசைபாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த தாக்குதலில் பழனிச்சாமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வேலுச்சாமிக்கு தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் பக்கத்து கம்பெனி காரில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளிகளாக சேர்ந்தனர். காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற நிலையில் சிசிடிவி கேமிராவில் கம்பெனி முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார், அதில் வந்து தகராறு செய்து தாக்குதல் நடத்தியவர் ஆகிய விபரங்கள் பதிவாகி இருந்தன. இதில் காரில் வந்ததுடன், கம்பெனி உரிமையாளரைத் தாக்கியவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணனின் மகன் ஹரிஹர சஷ்டிவேல் என்பது தெரியவந்தது. அவர் அடியாட்களை கூட்டி வந்து தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழனிச்சாமி கூறுகையில், அராஜகமாக எங்களைத் தாக்கியவர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தாக்குதல் சம்பவம் நடந்தபோது எங்களைத் தாக்கியவர்கள் யார் என்பது தெரியவில்லை. சிசிடிவி பதிவைப் பார்த்த பிறகுதான் அவர் ராதாகிருஷ்ணன் மகன் என்பது தெரியவந்தது. ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவின் செல்வாக்கு மிக்க தலைவரின் மகன் என்பதால் இந்த தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் தப்புவிக்க முயற்சி செய்யக் கூடாது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார்.