tamilnadu

img

மனிதர்களையும், நொய்யலையும் பாதுகாக்க கே.சுப்பராயனுக்கு வாக்களியுங்கள் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் பிரச்சாரம்

திருப்பூர், ஏப். 14 -திருப்பூர் மண்ணின் மனிதர்களையும், நொய்யல் ஆற்றையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என்று திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் கூறினார். திருப்பூரில் சனியன்று மாஸ்கோ நகர், ஆத்துப்பாளையம் ரோடு, செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தெரு முனைப் பிரச்சாரக் கூட்டங்களில் இயக்குநர் ராஜூ முருகன் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நம்மை அடிமைப்படுத்தும் மத்திய ஆட்சியையும், அவர்களிடம் அடிமையாக இருக்கும் மாநில ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வர இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இது வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக் கொண்டு தினமும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கோட்டுகளை அணியும் மோடி அதானி, அம்பானி வீட்டு விழாக்களுக்கும், நடிகைகளைச் சந்திக்கவும் நேரம் இருக்கிறது. ஆனால் மக்கள் பிரச்சனைகளில் இங்கே வந்து பார்ப்பதற்கு அவருக்கு நேரமில்லை. நான் திருப்பூரில் வேலை செய்தவன், இங்கே இடதுசாரி அமைப்பில் பங்கேற்று வாழ்க்கையைக் கற்றவன். மோடி ஆட்சி மக்களுக்கான ஆட்சி கிடையாது. அது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு உரிய ஆட்சி. கம்யூனிஸ்ட்டுகள் வந்தால் தொழில் அழியும் என்று பிரச்சாரம ்செய்கிறார்கள். ஆனால் இந்த மண்ணின் தொழிலையும், சிறு, குறு தொழில்களையும் அழிப்பது மோடி ஆட்சிதான். எனவே இந்த மண்ணையும், இந்த மண்ணில் உருவான பனியன் தொழிலையும், சிறு, குறு தொழில் துறையினரையும், மாசு பட்டுப்போன நொய்யல் ஆற்றையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க மோடி ஆட்சி தோற்கடிக்கப்பட வேண்டும்.இந்த மண்ணின் மனிதர்களால் எளிதில் எப்போதும் அணுக முடிந்த கம்யூனிஸ்ட் தலைவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கே.சுப்பராயனுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ராஜூ முருகன் கேட்டுக் கொண்டார்.அனைத்து இடங்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் பெருந்திரளானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பிரச்சாரத்தை கவனித்தனர்.

;