திருப்பூர்:
தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐ) நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்காக உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தமிழ்மொழி இல்லை. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே தொடர்பு கொள்ளும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் பயன்படுத்தக்கூடிய இஎஸ்ஐ நிறுவனத்தில் தமிழ் மொழியைப் புறக்கணித்திருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர்மாவட்டக்குழு வரும் அக்.12ஆம் தேதியன்று திங்கள்கிழமை திருப்பூர் ஓடக்காடு இஎஸ்ஐ அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஎஸ்ஐ நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 4 லட்சம் தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர். தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் உள்ளனர். இஎஸ்ஐ தொடர்பான தேவைகளுக்காக சந்தாதாரர்கள் தொடர்பு கொள்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி (TOLL FREE) எண் உள்ளது. இதில் தொழிலாளர்கள் தொடர்பு கொண்டால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே தானியங்கி முறையில் பதில் அளிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயன் பெறக்கூடிய இஎஸ்ஐ நிறுவனத்தில் தமிழ் மொழியில் தொடர்பு கொள்ள முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.அதேபோல், இஎஸ்ஐ கோவை சரக அலுவலகத்தின் இணையதளத்திலும் இந்தி, ஆங்கிலம் மட்டுமே உள்ளது. தமிழ் மொழி இல்லை. ஆகவே, கோவை இஎஸ்ஐ அலுவலக இணைய தளத்திலும் தமிழ் மொழியை இணைக்க வேண்டும். மத்திய அரசுதொடர்ந்து திட்டமிட்ட முறையில் இந்தித் திணிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே இஎஸ்ஐ நிறுவனத்திலும் தமிழ் மொழியைப் புறக்கணித்துள்ளனர் என்பது உறுதியாகிறது.எனவே, இஎஸ்ஐ கட்டணமில்லா தொலைபேசியிலும், கோவை இஎஸ்ஐ இணையதளத்திலும் தமிழ் மொழியிலும் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்த வேண்டும்.
தமிழில் பேசும் அதிகாரிகள் தேவை
அதேபோல், திருப்பூரில் உள்ள இஎஸ்ஐ அலுவலகத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட மேலாளர்பொறுப்பில் தமிழ் மொழி தெரியாத, பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் பணியாளர்கள், கோரிக்கைக்காக வரக்கூடிய தொழிலாளர்கள், சந்தாதாரர்கள் அவர்களது பிரச்சனைகள், கோரிக்கைகளை தெரிவித்தால், தமிழ் மொழி தெரியாத நிலையில் மேலாளரால் அதை புரிந்து கொண்டு தீர்வு காண முடிவதில்லை. இதனால் இஎஸ்ஐ அலுவலகத்துக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் தேவைகளை தெரிவித்து நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளது.
இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வேறு மாநிலங்களில் மத்திய அரசு சார் அலுவலகங்களில் நியமிக்கப்படக் கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் அந்தந்த மாநில மொழிகளில் தொழிலாளர்களுக்கு, சந்தாதாரர்களுக்கு பதில் சொல்லக் கூடியவர்களாக, பிரச்சனையைப் புரிந்து தீர்வு காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அதன்படிதமிழகத்தில் இஎஸ்ஐ அலுவலகத்தில் பணியாற்றும்உயர் அலுவலர்கள் தமிழ் மொழியில் தொடர்புகொள்ளக்கூடியவர்களாக, தமிழில் தொழிலாளர்களுக்கு பதில் சொல்லக் கூடியவர்களாக, பிரச்சனையைப் புரிந்து கொண்டு தீர்வு காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாட்டை இஎஸ்ஐ நிறுவனமும், மத்திய அரசும் உடனடியாக அமலாக்க வேண்டும்.
தொழிற்சங்க உரிமை பறிப்பு
இதுவரை இஎஸ்ஐ சந்தாதாரர்களான ஓய்வு பெற்றத் தொழிலாளர்கள் “லைப் சர்டிபிகேட்” எனப்படும் அவர்களின் ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் இஎஸ்ஐ-யில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை அரசிதழ் சான்று பெற்ற அலுவலர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ., ஆகிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களிடம் அந்த லைப் சர்டிபிகேட் சான்று பெற்று இஎஸ்ஐ அலுவலகத்தில் ஒப்படைத்தால் அதைப் பெற்றுக் கொண்டனர்.ஆனால் சமீப நாட்களாக தொழிற்சங்கத்தினர் லைப் சர்டிபிகேட் கையெழுத்திட்டுக் கொடுத்தால் அதை இஎஸ்ஐ அலுவலகத்தில் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர். இதன்மூலம் தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுத் தரும் உரிமையை மறுக்கின்றனர். இது தொழிற்சங்க உரிமை பறிப்பு மட்டுமின்றி, தொழிலாளர்களையும் அலைக்கழிக்கும் மோசமான செயலாகும். எனவே தொழிற்சங்கங்களிடமும் தொழிலாளர்கள் லைப் சர்டிபிகேட் கையெழுத்துப் பெற்றுத் தரும் வழக்கமான நடைமுறையைத் தொடரவேண்டும்.
தொழிலாளர்களை வஞ்சிப்பதா?
இஎஸ்ஐ சந்தாதாரர்களான தொழிலாளர் மற்றும்அவர்களது குடும்பத்தார், எந்த தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டு, அதற்குரிய மருத்துவச் செலவை இஎஸ்ஐ நிறுவனத்தில் கோரிப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை ஒரு தொழிலாளி அல்லது அவரது குடும்பத்தார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டால், ஓராண்டு காலத்துக்குள் அந்த மருத்துவச் செலவு குறித்த விபரத்தை இஎஸ்ஐயில் தாக்கல் செய்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.தற்போது கொரோனா தொற்றுப் பரவியுள்ள இன்றைய சூழலில் இஎஸ்ஐ மருத்துவச் செலவைக் கோரிப் பெறுவதற்கான கால அவகாசத்தை ஓராண்டில் இருந்து மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இஎஸ்ஐ நிறுவனம் வெட்டிச் சுருக்கியுள்ளது. பல்வேறு சூழ்நிலைகளில்மருத்துவம் பெறக்கூடிய இஎஸ்ஐ சந்தாதாரர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதற்கான விபரங்கள், ரசீதுகள் போன்றவற்றை அங்கிருந்து பெறுவதற்கே காலதாமதத்தைச் சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், இஎஸ்ஐயில் மருத்துவச் செலவைக் கோரிப்பெற 20க்கும் மேற்பட்ட ஆவணங்களை சேகரித்து ஒரு தொழிலாளி விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். இந்த நிலையில் ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற கால அளவை மூன்று மாதங்களுக்குள் என குறைத்திருப்பது தொழிலாளர்கள் மருத்துவச்செலவைக் கேட்டுப் பெறுவதை அவசரப்படுத்துவதாகவும், முறையான விபரங்கள், ரசீதுகள் இல்லாமல்கால அவகாசத்துக்குள் விண்ணப்பிக்க முடியாமலும், அதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான மருத்துவச் செலவையும் பெற முடியாத நிலையையே ஏற்படுத்தும். எனவே, ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை தொடர வேண்டும்.
அக்.12-ஆர்ப்பாட்டம்
இதுபோல் தொழிலாளர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இஎஸ்ஐ நிறுவனத்தைக் கண்டித்தும், அதற்கு பின்புலமாக செயல்படக்கூடிய தொழிலாளர் விரோத மத்திய அரசைக் கண்டித்தும், மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் சிஐடியு தொழிலாளர்கள் அக்டோபர் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் ஓடக்காடு (கே.என்.பி.புரம்) பகுதியில் உள்ள இஎஸ்ஐ அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். இஎஸ்ஐ உடனடியாக தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்து சக்தி மிக்க முறையில் தொழிலாளர்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு சிஐடியு தலைவர்கள் கூறியுள்ளனர்.