tamilnadu

img

பொதுவாழ்வில் நிறைகுடமாக ஜொலித்தவர் தோழர் கே.தங்கவேல்.... படத்திறப்பு நிகழ்வில் தலைவர்கள் புகழாரம்

திருப்பூர்:
பொதுவாழ்வில் நிறைகுடமாக  ஜொலித்தவர் தோழர் கே.தங்கவேல் என்று திருப்பூரில் நடைபெற்ற அவரது படத்திறப்பு நிகழ்வில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.திருப்பூர் குமார் நகர் சுப்பராயக் கவுண்டர் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று தோழர் கே.தங்கவேல் படத் திறப்புமற்றும் நினைவு மலர் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வரவேற்றார். இந்த நிகழ்வில் கே.தங்கவேலின் பணியைநினைவு கூர்ந்து தலைவர்கள் பேசியது வருமாறு:

கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் : தோழர் கே.தங்கவேல் பண்பாளர். ஓய்வறியாத படிப்பாளி அவர் மூத்தவர், இளைஞர்கள் என அனைத்துதரப்பினரிடமும் உறவு வைத்திருந்தார். அவர்களது தன்மைக்கு ஏற்ப விவாதிக்கக் கூடியவராக இருந்தார்.மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி : அவரது மறைவு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவர் பன்முகப் பணி செய்தவர். கட்சிக்கு பேரிழப்பு. யார் மீதும்எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் பக்குவமாகச் செயல்பட்ட தலைவர். அவரது இடத்தை நிரப்ப முடியாவிட்டாலும் அவர் பின்பற்றிய கொள்கை, லட்சியம், போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்: தோழர் கே.தங்கவேல் மார்க்சிய அடிப்படையில் உள்ளூர் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் என்று சொன்னார். அது மிகவும் முக்கியமானது. ஸ்தாபனத்தைப் பொறுத்தவரை கூட்டுத் தலைமை தேவை என்பதை வலியுறுத்தினார். அவர் பொறுப்பேற்ற மாவட்டங்களில் தோழர்கள் அதை நன்கு அறிவார்கள். அதேபோல் எதுஅடிப்படைப் பிரச்சனை, எது மேலோட்டமான, தற்காலிகப் பிரச்சனை என்பதைபகுத்தாய்ந்து, அடிப்படைப் பிரச்சனை களில் உறுதியாக நிற்கக்கூடியவர். அவரது வழியில் தமிழகத்தில் புரட்சிகர இயக்கத்தை முதன்மையான இயக்கமாக மாற்றப் பணியாற்றுவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி.,: கே.தங்கவேல் மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவர் மறைவுச் செய்தி கேட்டு கட்சிக்கு அப்பாற்பட்டுஏராளமானோர் வேதனையுடன் விசாரித்தார்கள். அந்த அளவுக்கு அவர் நிறைகுடமாக வாழ்ந்தார். 48 ஆண்டுகள் பல சந்தர்ப்பங்களில் உடன்பட்டும், முரண்பட்டும் உறவு கொண்டிருந்தாலும், அவரிடம்  பகை நெருப்பு பற்றியதே இல்லை. எப்போதும் அவர் காதுகளை மட்டுமே திறந்து வைத்திருப்பார். வாயைத் திறக்க மாட்டார். கொந்தளிப்பான காலத்தில் அவரது நிதானத்தையும், ஆழத்தையும் நான் பார்த்திருக் கிறேன். நிதானத்தைப் போல் சக்திமிக்க பதில் வேறெங்கும், எதிலும் இல்லை. அவரிடம் அனைவரும் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் நிதானம் தான்.

தொழிலாளர்களை தொழிற்சங்க மாக்குவது, அவர்களை அரசியல்மய மாக்குவது என்ற பணியை நாம் தொடர்ந்துமேற்கொள்ள வேண்டும். இடதுசாரிகளைக் கண்டு உணரும் அளவுக்கு மக்களை விழிப்படையச் செய்ய பணியாற்றுவதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி.அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்:  தோழர் கே.தங்கவேலிடம் இன்றைய இளையதலைமுறை கற்றுக் கொள்வதற்கு ஏராளமாக இருக்கிறது. அவர் படிப்பதற்கு நேரம் ஒதுக்குவார். நேர நிர்வாகத்தை பின்பற்றுவார். ஏராளமாகப் படிப்பார். பரந்த வாசிப்புக் கொண்ட மிகச்சிறந்த வாசிப்பாளர். கே.ரமணி, பூபதி, ஆர்.வெங்கிடு பணியாற்றிய கோவை மாவட்டத்தில், தோழர் கே.எஸ்.கே. பணியாற்றிய இந்த மண்ணில் தோழர் கே.தங்கவேல் 11 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக, பிறகு மாநில செயற்குழு உறுப்பினராக 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். தேவைப்படும்போது மிக அழுத்தமாக தனது கருத்தை முன்வைக்கக்கூடியவர்.தோழர்களின் குடும்பப் பிரச்சனைகளை காதும் காதும் வைத்ததுபோல் பேசி முடித்து வைப்பார். அவரது மறைவை கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டதாகவே உணர்கிறார்கள்.மனிதர்களை அதிகமாக நேசிப்பவர்கள் கம்யூனிஸ்டுகள். மனித வாழ்வு கிடைத்தற்கரிய பொக்கிஷம். அதில் அந்திமக் காலத்தில் திரும்பிப் பார்த்தால் மனிதகுல விடுதலை எனும் உன்னதமான நோக்கத்துக்காக போராடினோம் என்ற நிறைவுடன் நினைத்துப் பார்க்கும் நிலை இருக்க வேண்டும். ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்றுமாமேதை லெனின் கூறுகிறார். அவரதுவார்த்தைகளுக்கு ஏற்ப கே.தங்கவேல் சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்திருக்கிறார்.இவ்வாறு தலைவர்கள் பேசினர்.

இந்த நிகழ்வின் தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர் பல்வீந்தர்சிங் மற்றும் கோவை கே.சி.கருணாகரன், திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பி.குருசாமி ஆகியோர் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். பாடகர் கிருஷ்ணன், தோழர் கே.தங்கவேல் நினைவாக கவிஞர் நிதர்சனா எழுதிய பாடலை பாடினார்.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, என்.அமிர்தம், ஆர்.பத்ரி, சி.பத்மநாபன், ஏ.ராதிகா, எம்.கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் கோவை வி.ராமமூர்த்தி, ஈரோடு ஆர்.ரகுராமன், நீலகிரி வி.ஏ.பாஸ்கரன், வேலூர் எஸ்.தயாநிதி, சேலம் பி.ராமமூர்த்தி, கரூர் கே.கந்தசாமி, கிருஷ்ணகிரி எஸ்.ஆர்.ஜெயராமன், திண்டுக்கல் ஆர்.சச்சிதானந்தம், நாமக்கல் எஸ்.கந்தசாமி, தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிசுபாலன் மற்றும் தோழர் கே.தங்கவேல் அவர்களின் மகள் த.கவிதா, மருமகன் ஏ.கே.தங்கவேலன் உள்பட அவரதுகுடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட் டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கட்சி அணியினர் மட்டுமின்றி, பல்வேறு பொது அமைப்புகள், மாற்றுக் கட்சியினர், பிரமுகர்கள், தொழில் துறையினர் என பலதரப்பினரும் இந்த நிகழ்வுக்குத் திரண்டு வந்திருந்தனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி நன்றிகூறினார்.        (ந.நி.)

படத்திற்கு கீழே உள்ள தொகுப்பு  : அனுபவப் பள்ளி ஆசான் தோழர் கே.தங்கவேல் நினைவு மலரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிடதிருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் பெற்றுக் கொள்கிறார்.