tamilnadu

கடன் செலுத்தக் கோரி பெண்களுக்கு மிரட்டல் மத்திய அரசு உத்தரவை மீறும் தனியார் நிதி நிறுவனங்கள்

திருநெல்வேலி, மே 17- பெண்கள் சுய உதவிக்குழுக் கடன் தவணைத் தொகை கட்டுவதற்கான அவகாசத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருநெல்வேலி - தென்காசி மாவட்டக்குழு வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 5 முதல் 20 பெண்கள் வரை இணைந்து ஒரு குழு உருவாக்கி மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் பெறுகிறார்கள். முத்தூட், உஜ்ஜீவன், ஆசிர்வாத், எக்விடாஸ், மகாசேமம் IDFC, புல்லர்டோன், தனலட்சுமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் அம்பை வட்டாரப் பகுதிகளில் இந்த குழுக்களுக்கு கடன் கொடுத்து வாரம் மற்றும் மாதத் தவணைகளில் வசூல் செய்கின்றனர். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவரின் தகுதிக்கேற்ப ரூ.30000 முதல் 60000 வரை கடன் வழங்கப்படு கிறது.

(அரிதாக சிலருக்கு 1,00,000 வரை கடன் வழங்கப்படுவதும் உண்டு). கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வேலை இழந்துள்ள சூழ்நிலையில் அனைத்து விதமான வங்கி, நிதி நிறுவன வட்டிக் கடன்கள் 3 மாதங்களுக்கு (ஏப்ரல்-ஜூன்) மக்களிடமிருந்து  வசூலிக்க வேண்டாமென (EMI moratorium) மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் அறிவித்திருந்தது. மாநில அரசும் இதையே சொன்ன தோடு, குழுக் கடன் தவணை மற்றும் இதர தனியார் வட்டி, தவணைகளை மறு உத்தரவு வரும் வரை வசூல் செய்யக்கூடாது எனவும், மீறி வசூலிக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. ஆனால் குழுக் கடன் அளித்த நிறுவனங்களின் அலுவலர்கள் இந்த மாதம் தவணையை செலுத்த வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்கள். மேலும் அடுத்த மாதம் கண்டிப்பாக தவணையை செலுத்த வேண்டும் எனவும், தவறினால் தங்கள் நிறுவனம் இனி எங்கும் கடனே பெற முடியாதவாறு செய்து விடுவதாகவும் சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

ஜூன் மாதம் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை குழுக்கடன் வசூல் செய்யக்கூடாது என்ற மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்பையும் மீறி இந்த நிதி நிறுவனங்கள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள். நியாயமாக செப்டம்பர் வரை கடன்கள் வசூல் செய்வதை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டால் தான் மக்கள் இந்தப் பொருளா தாரத் துயரில் இருந்து மீளமுடியும். இல்லையென்றால் கடன்களை ஜூன் இறுதி வரை வசூல் செய்யக்கூடாதென இந்த நிறு வனங்களுக்கு பொது அறிவிப்பு கொடுக்க வேண்டும். இதனால் கொஞ்சமாவது நிம்மதி கொள்வார்கள். எனவே இப்பிரச்சனையில் தமிழக அரசு உரிய அறிவிப்பு களை வெளியிடுவதோடு, அரசு உத்தரவுகளை மீறும் நிதி நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.