திருவட்டார், ஜுலை 8- குமரி மாவட்டம் கப்பியறை கிராமத்தில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ரவி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கல்குளம் தாலுகா கப்பியறை கிராமம் புலஎண் 613 முதல் 617 வரை உள்ள செல்லங்கோணம், கருங்கல் பூக்கடை இணைப்பு பாலம் பகுதியில் பாம்பூரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியை சுற்றி சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருவதோடு அந்தப்பகுதியில வீடுகளும் உள்ளன. வெள்ளப்பெருக்கு காலங்களில் உடைப்பு ஏற்பட்டு அழிவுகள் ஏற்பட் டுள்ளன. இந்நிலையில அந்த பகுதியை சார்ந்த கிருஷ்ணன் என்பவர் வாய்க்கால் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து சுவர் கட்டி அடைத்து வருகிறார். இதனால் வெள்ளப்பெருக்கு காலங்களில் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து அழிவை உருவாக்குவதோடு வீடுகளிலும் தண்ணீர் புகும் நிலை ஏற்படும். எனவே, நீர்நிலையை ஆக்கிரமித்து சுவர் கட்டும் நபர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.