tamilnadu

img

என் கலையும் கடமையும் நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது- இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி

நெல்லை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து இயக்குநர் மாரிசெல்வராஜ் களப்பணியாற்றிய செயல் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்,என் கலையும் கடமையும் நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது என்று இயக்குநர் மாரிசெல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை பொழிந்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர்.பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் களத்தில் இருந்து உதவி செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது மற்றும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டது. அமைச்சர், அரசு அதிகாரிகளுடன் இணைந்து இயக்குநர் மாரி செல்வராஜ் எப்படி நிவாரண பணிகளில் ஈடுபடலாம். இயக்குநர் என்றால் இயக்குநர் வேலையை மட்டும் பாருங்கள் என்று கடும் விமர்சன கணைகளை தொடுத்தனர். இந்நிலையில், மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் என் கலையும், கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல.. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது என பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் தொடர்ந்து தன் படங்கள் மூலம் சமூக கருத்துக்களை பேசி வருகிறார். சாதியால் தான் பட்ட வலிகளையும், வேதனைகளையும் தன் படைப்பின் மூலம் இச்சமூகத்தை கேள்வி கேட்கிறார்.இக்கேள்விகளை எதிர்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் தொடர்ந்து மாரி செல்வராஜை விமர்சித்து வருகின்றனர். அதன் வெளிப்பாடாக மாமன்னன் திரைப்படம் வெளியான சமயத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த சாதி தலைவன் கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார். அப்போது இயக்குநர் மாரிசெல்வராஜை விமர்சிக்கிறோம் என்கிற பெயரில் அந்த சாதித்தலைவன் கதாபாத்திரத்தை கொண்டாடி சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டனர் சாதிவெறியர்கள். இதுபோன்ற மனப்பான்மையை கேள்வி கேட்டுதான் தன் படைப்புகளை படைத்தார். ஆனால் அவர் சொல்ல வருவதை பொருட்படுத்தாமல் சாதி ஆதிக்க சக்திகள் விமர்சனம் என்கிற பெயரில் தங்களது சாதிவெறியையே காட்டினர்.

தற்போது, திருநெல்வேலி பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் மாரிசெல்வராஜை நீங்கள் ஏன் நிவாரண பணிகளில் ஈடுபடுகிறீர்கள் என்று விமர்சனத்தை வைக்கின்றனர். இயக்குநர் மாரிசெல்வராஜுன் சொந்த மாவட்டம் திருநெல்வேலி. தான் படித்து வளர்ந்த மாவட்டம், தன் சொந்த ஊர் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இயக்குநர் வேலையை மட்டும் பாருங்கள் என்று சிலர் விமர்சனம் வைக்கின்றனர். ஒரு இயக்குநர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் என்ன தவறு இருக்கிறது? இதுபோன்ற விமர்சனங்கள் இயக்குநர் மாரிசெல்வராஜின் மீது சாதி ஆதிக்க சக்திகள் நிகழ்த்தும் சாதிய வன்மத்தை தவிர வேறெதும் இல்லை.