திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர், மாநகர காவல் துறையினர், ரயில்வே காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமான பொருள்கள், பைகள் ஏதேனும் உள்ளனவா? என்பதை குறித்து ஆய்வு செய்து வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத்துறை வாகனங்களும் ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தப்பட்டன, ரயில் நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்(42) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.