tamilnadu

img

வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக தலைவர்கள் கைது....

திருத்தணி:
தமிழக அரசு  அனுமதிக்காத நிலையில் திருத்தணியில் “வேல்” யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள்  கைது செய்யப்பட்டனர்.நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை திருத்தணியிலிருந்து திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை செல்லப்போவதாக தமிழக பாஜக அறிவித்தது. இந்த யாத்திரை கலவரத்தை தூண்டும் என்பதால் அனுமதி தரக்கூடாது என்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழக  அரசியல் கட்சிகள்  முதல்வருக்கு கோரிக்கை விடுத்தன.

பாஜகவின் யாத்திரைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையில், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அரசின் முடிவை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.`ஆனால் நவம்பர் 6 அன்று  தடையை மீறி வாகனத்தில் திருத்தணிக்கு வந்த  பாஜக தலைவர் எல்.முருகன்  மலைக் கோயிலுக்கு சென்றார். பின்னர்  சென்னை பைபாஸ் சாலைக்கு வந்து  வேல் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், முக்கிய நிர்வாகிகள் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா  உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் யாத்திரை செல்ல முயன்ற பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் போலீசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.