தஞ்சாவூர், மே 22 -பேராவூரணியில் உள்ள தபால் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி தாலுகா பேராவூரணி. இது சட்டமன்ற தொகுதியாகவும் உள்ளது. பேராவூரணி பேரூராட்சி பகுதியில் ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும், பல்வேறு அரசுத்துறை வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும், தபால்நிலைய வங்கி சேவைகளுக்கும் பயனு ள்ளதாக இருப்பதால், பெரும்பாலோர், நம்பிக்கையான அரசின் தபால் துறையையே நாடி வருகின்றனர்.பட்டுக்கோட்டை சாலையில், பேராவூரணி தபால்நிலையம் வாடகை கட்டிடத்தின் மாடியில் இயங்கி வருகிறது. மேலும் தபால்நிலையம் இருக்கும் இடம் வெளியில் தெரியும் வகையில் பார்வையாக இல்லாமல் உள்ளது. மேலும் வயதானோர், நோய் வாய்ப்பட்டோர் மாடிக்கு ஏறிச் செல்வதில் கடும் சிரமம் உள்ளது. தபால் நிலையம் கட்டுவதற்கு என சேதுசாலையில் வட்டாட்சியர் அலு வலகம் எதிரில், ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளி அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கப்ப ட்டுள்ளது. அந்த இடம் உரிய பராமரிப்பு இன்றி கருவேல மரங்கள் புதர்போல மண்டிக் கிடக்கிறது. அந்த இடம் தங்களுடையது தானா என அஞ்சல் துறை நிர்வாகத்திற்கே தெரியாத அளவிற்கு நிலைமை உள்ளது. அந்த இடத்தில் சொந்த கட்டிடத்தில் தபால்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரும், வர்த்தக கழக கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினருமான டாக்டர் மு.சீனிவாசன் கூறுகையில், "பல வருடங்களுக்கு முன்பு தபால்நிலையம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடம், கருவேல மரக்காடாக மாறிக் கிடக்கிறது. இந்த இடத்தில் புதிதாக தபால்நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால்துறை அதிகாரிகளை பலமுறை நேரில் அணுகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஆண்டு மே 23-ம் தேதி போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு கடிதம் எழுதினேன். அவரிடமிருந்து ஜூலை 30-2018 அன்று வந்த பதில் கடிதத்தில் விரைவில் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும் இன்று வரை நடவடிக்கை இல்லை. இந்த இடத்திற்கான ஆவணங்கள், உரிய விபரங்கள் கிடைத்தால் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலமாகவோ, வேறு வகையிலோ கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யலாம். ஆனால் தபால்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்" என்றார்.