tamilnadu

img

சுர்ஜித்தை மீட்கும் பணியை கை விட மாட்டோம் - ராதா கிருஷ்ணன்

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியை கை விட மாட்டோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார். 
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 65 மணி நேரங்களைக் கடந்து தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் சுஜித் இருப்பதாகத் தெரிகிறது.
இதையடுத்து ரிக் இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கப்பட்டது. முதல் ரிக் இயந்திரம் 35 அடி ஆழம் குழி தோண்டியது. அப்போது அந்த இயந்திரம் பழுதானது. இதையடுத்து 2-ஆவது ரிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. கடினமான பாறைகளால் 2-வது ரிக் இயந்திரத்திலும் பழுது ஏற்பட்டதால், குழி தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 
பின்னர் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது உடனடியாக சரிசெய்யப்பட்டு தொடர்ந்து சுரங்கம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ஆவது ரிக் இயந்திரம் 7 மணி நேரத்தில் 5 அடி குழி தோண்டியுள்ளது. ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 40 அடிக்கு குழி தோண்டப்பட்டுள்ளது.
குழந்தை சுர்ஜித்தை மீட்க குழிக்குள் இறங்கவுள்ள 3 தீயணைப்பு வீரர்களுக்கும் தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர், கேமரா, விளக்குகள் ஆகியவற்றுடன் மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். என்எல்சி ஒப்பந்தப் ணியாளர்கள் துளையிட்ட பின் தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுவர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,
ரிக் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாக உள்ளது. இயந்திரத்தால் திட்டமிட்டபடி பள்ளம் தோண்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாறைகள் கடினமாக இருக்கின்றன. இயந்திரங்களே திணறக்கூடிய அளவுக்கு பாறைகள் கடினமாக உள்ளன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்தது இல்லை.
கடினமான பாறைகளை உடைக்க ரிக் இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் ட்ரில்லிங் பிளேடு சென்னையில் இருந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்தடையும். கணித்தபடி இரண்டு ரிக் இயந்திரங்களாலேயே முழுமையாக பள்ளம் தோண்ட முடியவில்லை. இனி இந்த இயந்திரத்தை வைத்து மேலும் தோண்ட முடியுமா என தெரியவில்லை. 
விரைவில் மாற்று வழி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். குழந்தை சுர்ஜித்திடம் இருந்து எந்த அசைவும் இல்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த  வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெர்மன் இயந்திரம் மூலம் குழி தோண்டியும் பலனில்லை. கடினமான பாறைகள் இருக்கின்றன. குழந்தையின் மீது மண் மூடி உள்ளது. இதில் நிபுணத்துவம் கொண்ட குழு பங்கெடுத்து வருகிறது. குழந்தை 88 அடியில் உள்ளது. நாங்கள் 98 அடி தோண்டி பிறகு குறுக்கே குழி தோண்ட முடிவு செய்துள்ளோம் விரைவில் முடியும் என்று நினைக்கிறோம் ஆனால் பாறைகள் காரணமாக அதன் நேரம் அதிகரிக்கிறது. ஆனால் தொடர்ந்து தோண்டும் பட்சத்தில் கரிசல் மண் தென்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் தொடர்ந்து தோண்டுவோம். மீட்பு பணியை எந்த விதத்திலும் கைவிட மாட்டோம். கடைசி விளிம்பு வரை எங்கள் பணியை தொடர்வோம் . இந்த பணி முடிய 12 மணி நேரம் ஆகலாம் என்று தெரிவித்துள்ளார்.