tamilnadu

திருச்சி மற்றும் தஞ்சாவூர்

பலா பழ விளைச்சல் பாதிப்பு 
முசிறி, ஜூலை 15- திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் கொல்லி மலையிலிருந்து விற்பனைக்கு லோடு வேனில் கொண்டு வரப்பட்ட பலாப் பழத்தை பொதுமக்கள் விரும்பி வாங்கி சென்றனர். மழைக் குறைவு காரணமாக விளைச்சலும், விலை ஏற்றமும் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  மழை குறைந்து போனதால் பலாப் பழத்தின் விளைச்சலும் குறைந்துள்ளது. இதனால் கொல்லிமலையில் பலாப்பழத்தின் விலையும் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு குறைந்த விலையில் பலாப் பழத்தை விற்க முடிய வில்லை. விலையை குறைத்தால் நஷ்டம் ஏற்பட்டு விடும். இருந்தாலும் பெரிய அளவு லாப நோக்கு இல்லாமல் சீசனுக்கு மட்டுமே பலாப் பழம் கிடைக்கும் என்பதால் அனைவரும் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற நோக்கில் விற்பனை செய்வதாக பலாப் பழ வியாபாரி அருண் கூறினார். ஒரு பலாப் பழம் ரூ.30 முதல் ரூ.250 வரை விற்பனையானது.

3 பேருக்கு கத்திக்குத்து
தஞ்சாவூர் ஜூலை.15-  தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி(56) சலவை தொழிலாளி. இவருக்கும் இவரது தம்பி நாகராஜ் மனைவி மலர்  இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இருவரது வீடும் அருகருகே உள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மலரின் குடும்ப நண்பர் தில்லங்காட்டை சேர்ந்த லெட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் ஆக மூன்று பேரும் சேர்ந்து சின்னத்தம்பி, அவரது மனைவி முனியம்மாள், மகன் மணி கண்டன் ஆகிய மூவரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேரும் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரில் சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மலர், லெட்சுமணன் உள்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.