tamilnadu

திருச்சி , புதுக்கோட்டை முக்கிய செய்திகள்

மீன்பாடி வண்டிக்கு தடையால் ஆட்டோ வாங்க கடனுதவி  
திருச்சிராப்பள்ளி, அக்.26- மீன்பாடி வண்டிகள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக விதிக்கப்பட்ட இந்த தடை யால் மீன்பாடி வண்டிகள் வைத்துள்ளவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 11 பேருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து அலு வலகம் மூலம் டிரைவிங் லைசன்ஸ் பெற்றுத் தரப்பட்டது. அடுத்ததாக லைசன்ஸ் பெற்ற 11 பேருக்கும் தலா ரூ 3 லட்சம் முதல் ஆட்டோ, மினிலோடு ஆட்டோவும் வங்கி கடன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை உரியவர்க ளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்(சட்டம் ஒழுங்கு) நிஷா ஆகியோர் உரியவர்க ளுக்கு வாகனங்களை வழங்கினர்.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருச்சிராப்பள்ளி, அக்.26- திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் கைபந்து, கோ-கோ, நீச்சல் மற்றும் தடகள போட்டிகளில் வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் நீச்சல் போட்டியில் 45 ஆண்களும், 26 பெண்களும்,  தடகள போட்டியில் 126 ஆண்களும், 50 பெண்களும் கலந்து கொண்டனர். கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும், கோ– கோ போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டனர்.  பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் வாழ்த்துரை வழங்கினார். போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிரபு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை, அக்.26- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பொம்மாடிமலையைச் சேர்ந்தவர் முத்து மனைவி சீதா. இவர், நார்த்தாமலை பகுதியில் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் 8 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர். இது குறித்து கீரனூர் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

;