tamilnadu

img

கஜா புயலின் பாதிப்பால் நிவாரணம் கேட்டுப் போராடிய 140 தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்கு ரத்து

நாகப்பட்டினம், மே11-2018, நவம்பர்-15 நள்ளிரவில், கஜா புயல், நாகை மாவட்டத்தைக் கடுமையாகத் தாக்கியது. இதில் மிகவும் பாதிக்கப்பட்டவை, வேதாரணியம் வட்டத்தில் உள்ள தலைஞாயிறு ஒன்றியப் பகுதிகளாகும். தலைஞாயிறு ஒன்றியத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தலைஞாயிறு அருகில் உள்ள தலித் மக்கள் நிறைந்த பகுதி. சந்தானம் தெரு.. வீடுகளை இழந்து, உணவு, உடைமைகளை இழந்து மக்கள் வீதியில் நின்றனர்.ஊரெல்லாம் இருளில் மூழ்கிக் கிடந்தபோது, தலைஞாயிறுக்கு அருகில் உள்ள தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சொந்த ஊரான ஓரடியம்பலத்தில், அமைச்சருக்குச் சொந்தமான இரண்டு பெரிய மாளிகைகள் மட்டும், போலிஸ் காவலுடன்,ஜெனரேட்டர் வசதியோடு ஜெகஜோதியாய்ப் பிரகாசித்தன. தலைஞாயிறுக்கு தன் பங்களாவுக்குக் காரில் வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காரை மறித்துப் புயலில் பாதித்த மக்கள் நிவாரணம் கேட்டுப் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, போராடிய மக்களின் எதிர்ப்பிலிருந்து தப்பித்து, அமைச்சர், அங்கிருந்த ஒரு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஓடினார்.

இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இரவோடு இரவாக நூற்றுக் கணக்கான போலிசை வைத்து, சந்தானம் தெரு, தலித் மக்களின் வீடுகளில் புகுந்தும் வீதிகளில் அநாதைகளாக நின்றிருந்த அந்த ஏழை எளிய மக்களையும் அராஜக முறையில் அடித்து நொறுக்கிக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள் போலிசார். சந்தானம் தெருவைச் சேர்ந்த தலித் மக்கள் உட்பட 140 பேர் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு, குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டு, இந்த வழக்கு வேதாரணியம் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.சி.பி.எம். தலைவர்கள் கைதுகைது செய்யப்பட்ட சந்தானம் தெரு தலித் மக்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமென்று, 15.12.2018 அன்று, புயலால் சிதைந்து கிடந்த தலைஞாயிறு பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன், விதொச மாநில பொதுச் செயலர் வி.அமிர்தலிங்கம் உள்பட நூற்றுக்கணக்கான சி.பி.எம். தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வழக்குப் போடப்பட்ட சந்தானம் தெரு தலித் மக்கள் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாரணியம் நீதி மன்ற விசாரணைக்குத் தடை விதிக்குமாறும் நிவாரணம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் தூண்டுதலின் பேரில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்குகளுக்குத் தடை

வெள்ளிக்கிழமை அன்று, சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதியரசர் இளந்திரையன் தீர்ப்பளித்தார். ‘‘கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டுப் போராடியிருக்கிறார்கள். அவர்கள் மீது இரக்கம் காட்டி நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக, அவர்களைத் துன்புறுத்தி வழக்குகள் போட்டு வாட்டுவது நியாயமல்ல. எனவே, வேதாரணியம் நீதிமன்றத்தில் இந்த 140 பேர் மீது உள்ள விசாரணைக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என உன்னதமான தீர்ப்பு வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டுள்ளது. இது, சொந்த ஊர் மக்களாகிய தலித் மக்கள் மீது வன்மம் கொண்டு வழக்குப் போடக் காரணமான அமைச்சருக்கு நீதிமன்றத் தீர்ப்பால் கிடைத்த பலத்த அடியாகும்.

ந.காவியன்