உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரிக்கை
தஞ்சாவூர். செப்.27- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு, 45 நாட்களைக் கடந்த நிலையில், பல ஆறுகளின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. கொள்ளிடத்தில் உபரிநீர் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஆற்றுப் பாசனக் கோட்டம், திருச்சி - உய்யக்கொண்டான் வாய்க்காலில், குறிப்பாகத் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இது விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டையில் உள்ள ஏரியில் போதுமான அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டைப் போலவே தண்ணீர் திறந்து விடவும், மதகுகளில் உள்ள அனைத்து ஷட்டர், மதகுகளைச் சீரமைத்துத் தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் ஒரத்தநாடு வட்டம் கருக்காடிப்பட்டியில் அமைந்துள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மேல்கூரை பலத்த சேதமடைந்து, இதுவரை சீர் செய்யப்படாமல் உள்ளது. இதே போல பூதலூர் தாலுகா மாரநேரி நேரடி நெல் கொள்முதல் நிலைய மேற்கூரையும் சரி செய்யப்படாமல் உள்ளது. இவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். மேலும் ஒரத்தநாடு தாலுகா காரியாவிடுதி நேரடி நெல் கொள்முதல் நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டுங்குழியுமாக இருப்பதால், விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும்" இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
எரிவாயு குழாய் பதித்தல்
பூதலூர் தாலுகா செங்கிப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளை அழைத்துப் பேசி, கருத்து கேட்டு அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப்.27- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பொதுகுழாய் இல்லாத பகுதிகளில் பொதுகுழாய் அமைத்துக் குடிநீர் வழங்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளைச் செப்பனிட வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி, புதிய மின்கம்பங்களை அமைத்து, எரியாத மின் விளக்குகளை மாற்ற வேண்டும். அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் 100நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் பிச்சாண்டார்கோவில் உள்பட 9 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிச்சாண்டார்கேவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுப்பு பேசினார். மாருதிநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் சக்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் பேசினார். கூத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பழநிசாமி பேசினார். வெங்கங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சந்திரன் பேசினார். சமயபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் பேசினார். தேவிமங்களத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் ஜெயராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் கனகராஜ் ஆகியோர் பேசினர். ஆய்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டக்குழு உறுப்பினர் தேவராஜ் பேசினார். சிறுகனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளைசெயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவராஜ் பேசினார். எம்.ஆர்.பானையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கிளை செயலாளர் பிரபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டக்குழு சம்பத் பேசினார்.