தெப்பமாக மாறிக் கிடக்கும் வேட்டங்குடி பள்ளிச் சாலை
சீர்காழி, செப்.14- சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்தனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வேட்டங்குடியிலிருந்து வெள்ளக்குளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் வேட்டங்குடி நடுநிலைப்பள்ளிக்கு எதிரே மழை நீர் தேங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் அவ்வப்பொழுது பெய்து வரும் மழை நீர் சாலையில் பள்ளமாக உள்ள பகுதியில் தேங்கி விடுகிறது. ஒரு முறை மழை பெய்து தண்ணீர் இப்பகுதியில் தேங்கி விட்டால், சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி மீண்டும் வடிவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விடும். இதனால் பள்ளி மாணவர்கள் இந்த சாலையின் வழியே செல்லும் போது தேங்கியுள்ள மழை நீர் மாணவர்களின் உடையில் பட்டு பட்டு நிறம் மாறி விடுவதால் அச்சத்துடனையே பள்ளிக்கு சென்று வருகின்றனர். இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் செல்வோர்களும், சாலையில் தேங்கிக் கிடக்கும் இந்த குட்டை போன்ற தண்ணீரில் தடுமாறி விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேட்டங்குடி கிராமப் பொதுமக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வில்வநாதன் கூறுகையில், வேட்டங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே சாலையில் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு பள்ளமாகவும், மிகவும் மோசமான நிலையிலும் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் சாலையைக் கடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே பள்ளமான சாலையை சரி செய்ய மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்கு விசாகா குழு அமைக்க கோரிக்கை
நாகப்பட்டினம், செப்.14- நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட 13-வது மாநாட்டின் ஒரு பகுதியாக, மாவட்ட மகளிர் மாநாடு சனிக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ராணி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தணிக்கையாளர் சி.வாசுகி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் எஸ்.சித்ராகாந்தி துவக்கவுரையாற்றினார். சமூக செயல்பாட்டாளர் த.லீலாவதி நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கலா நன்றி கூறினார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி, பணிபுரியும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை விசாரிக்க உடனடியாக மாவட்டத்தில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். பெண்கள் பணிபுரியும் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அம்மா குடிநீர் விற்பனை நிலையம் மூடல் : பயணிகள் அவதி
சீர்காழி, செப்.14- நாகை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனை நிலையம் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து குடிநீர் பாட்டில்கள், அரசு போக்குவரத்து கழக மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுவது நிறுத்தப்பட்டு எல்லா ஊர்களிலும் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மிக குறைந்த விலையில் ரூ.10-க்கு 1 லிட்டர் அம்மா குடிநீர் கிடைக்காததால் பயணிகளும், பொதுமக்களும் தாகத்திற்கு ரூ.20-க்கு அதிக விலை கொடுத்து தனியார் மினரல் வாட்டரை வாங்க வேண்டியுள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலை சென்னையில் மட்டும் தயாரிக்காமல் அந்தந்த மாவட்டங்களில் தயாரித்து விநியோகித்தால் பயணிகளும், பொதுமக்களும் பயனடைவார்கள் என்று பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் தற்போதைய ஆளும் அதிமுக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத் திட்டங்களை முடக்கி வருவதாக பொதுமக்கள் கூறினர்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
தரங்கம்பாடி, செப்.14- மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென தரங்கம்பாடி வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது 2019-20 ஆண்டிற்கான சங்க நிர்வாகிகள் தேர்வு வழக்கறிஞர்கள் எஸ்.கருணாநிதி, திருமால் சுந்தரம், சங்கமித்ரன் முன்னிலையில் நடைபெற்றது. புதிய தலைவராக கே.எஸ்.எஸ்.கருணாநிதி, செயலாளராக எம்.ஆர்.எஸ்.ராஜ்குமார், பொருளாளராக சண்முகசுந்தரம், துணைத்தலைவர்களாக தமிழ்செல்வன், கோபிநாத், இணை செயலாளர்களாக ஜி.எஸ்.குணா, ஏ.நிர்மலா, என்.திவ்யபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.