tamilnadu

img

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை... கொடூரன்களை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் நடராஜபுரம் முள்ளால் கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் காவல்துறை தனி அதிகாரிகளை நியமனம் செய்து விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் லால்குடி ரவுண்டானா அருகில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.லால்குடி பகுதியில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரியநிவாரணமும், பாதுகாப்பும் வழங்கவேண்டும். லால்குடி உட்பட அனைத்துமகளிர் காவல் நிலையத்திலும் போதுமான காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். முதல் தகவல் அறிக்கை கொடுத்தால்தான் சிகிச்சை தரப்படும் எனும் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.மாதர் சங்க ஒன்றிய செயலாளர் கோமதி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மாவட்டச் செயலாளர் மல்லிகா, மாவட்டத் தலைவர் லிங்கராணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாதர் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.