tamilnadu

கண்துடைப்பாக குடிமராமத்து பணி  வாய்க்காலை முழுமையாக தூர்வாரி  விவசாயத்தை பாதுகாக்கக் கோரிக்கை

 திருச்சிராப்பள்ளி: அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் சீனிவாசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் செல்லும் புதுவாத்தலை வாய்க்கால் மூலம் சுமார் 1500 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாய்க்காலில் இருந்து முத்தரசநல்லூரில் கிளை வாய்க்காலாக காட்டு வாய்க்கால் பிரிகிறது. இதன் மூலம் முத்தரசநல்லூர் பகுதியில் சுமார் 100 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து தற்சமயம் ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது. ஆனால் தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாமல் பெயரளவில் கண்துடைப்பாக நடைபெற்றதால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.  எனவே அந்த வாய்க்காலில் தண்ணீர் வரும் முன் முழுமையாக தூர்வாரி இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை கொடுத்த போது விதொச மாவட்ட செயலாளர் தங்கதுரை, மாவட்டத் தலைவர் செல்வராஜ், ராஜேஷ்கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.