ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத கட்சி பாஜக
இரா.முத்தரசன் பேட்டி
புதுக்கோட்டை, ஜூன் 28- ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாஜக சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன். புதுக்கோட்டையில்வெள்ளி க்கிழமையன்று அவர் செய்தியாளர்க ளுக்கு அளித்த பேட்டி: கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது தற்போதைய நீர்த் தேவையை எந்த வகையிலும் தீர்க்காது. 2013-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்து போது 110 விதியின் கீழ் அறிவித்த இந்தத் திட்டத்தை இத்தனை நாட்களாக கிடப்பில் போட்டுள்ளனர். இன்றிலிருந்து பணியை தொங்கினாலும் 2021-ல் தான் இத்திட்டம் நிறைவடையும். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். அப்படியென்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை சட்டமன்றத்தில் முதல்வர் விளக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுப்பது ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையே காட்டுகிறது. பாஜக, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உடைய கட்சி. நடைபெறக் கூடிய சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எட்டு வழிச்சாலை, நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு என்ன என்பதை விளக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது. விகிதாச்சார முறையில் எந்தந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் உள்ளது என்பதை பார்த்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார். பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் மு.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பெண் கொலையில் வாலிபர் கைது
கும்பகோணம், ஜூன் 28- கும்பகோணத்தில் மேலகொற்கை யில் வசிப்பவர் பாண்டியன்(50). கோவையில் ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார். இவரது மனைவி வசந்தி(35). இவர்களுக்கு மகன் சந்தோஷ்(18), மகள் சந்தியா(14) உள்ளனர். சந்தோஷும் கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். சந்தியா 9-ம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு சந்தியா செல்வது வழக்கம். கடந்த 17-ம் தேதி பள்ளிக்கு சென்ற சந்தியா தாத்தா வீட்டிற்கு சென்றார். மறுநாள் 18-ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்த போது வசந்தி உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரித்தனர். இந்நிலையில் பாண்டியனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலமுருகன்(35), மின்வாரிய ஒப்பந்த ஊழியர், கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமியிடம் சரணடைந்தார். இதையடுத்து தாலுகா காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பாண்டியனின் சித்தப்பா பாலகிருஷ்ணன் பக்கத்து வீட்டில் வசிக்கிறார். இவரது மகன் பாலமுருகனுக்கும், வசந்திக்கும் அடிக்கடி தகராறும், முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 17-ம் தேதி வீட்டின் பின்புறத்தில் இருந்த மாமரத்தில் மாங்காய்கள் காணாமல் போன பிரச்சனையில் ஆத்திரமடைந்த பாலமுருகன் அன்று இரவு இரும்பு ராடால் வசந்தியை அடித்து கொலை செய்தார். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகையை திருடி சென்று கைரேகை தெரியாமல் இருக்க ஈரத்துணியால் துடைத்து விட்டு நகையை மண்ணிற்குள் புதைத்து வைத்து விட்டு நகைக்காக வசந்தியை கொள்ளையர் கொலை செய்து இருக்கலாம் என்று திசை திருப்ப முயன்றது தெரிந்தது.