தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு
தஞ்சாவூர், மே 29- குடிமராமத்து பணிகளை முறைகேடின்றி செயல்படுத்த வலியுறுத்தி, தஞ்சை மாவட்டம் முழுவதும், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகள், குடிமராமத்து பணிகளை திட்ட மதிப்பீட்டின்படி ஊழல் இல்லாமல் முறையாக செயல்படுத்த வேண்டும். பணிகள் நடைபெறும் இடங்களில் அந்த பணிக்கான திட்ட மதிப்பீட்டு தொகை, ஒப்பந்ததாரர் பெயர், பணி துவங்கிய தேதி, பணி முடிக்கப்பட வேண்டிய தேதி உள்ளிட்ட விபரம் எழுதப்பட்ட பெயர் பலகையை பணி நடைபெறும் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும். தூர்வாரும் பணிகள், குடிமராமத்து பணிகள் முறைகேடின்றி நடைபெறுவதை உத்தரவாதப்படுத்திட அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். ஜூன் 12 க்கு முன் அனைத்து பணிகளையும் முறையாக செய்து முடித்து, கடைமடைப் பகுதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் செல்வதற்கான வகையில், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைமடைப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர் வழிப் பாதைகளையும், ஏரிகளில் உள்ள மதகு, சட்டர் போன்றவற்றை சரி செய்வதற்கும் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்திட வேண்டும். விவசாய பயன்பாட்டிற்காக நடைபெறும் இதுபோன்ற பணிகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1-ல் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். பின்னர் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.