கீரமங்கலம், ஜூன் 2-கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்காண மரங்கள் நாசமானது. இதனால் இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது. அதனால் புயலில் இழந்த மரங்களை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் கீரமங்கலம், கொத்தமங்கமல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சீரமைக்கும் குளங்கள், ஏரி கரைகளில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டமும் உள்ளது.இந்நிலையில் உலக சுற்றுச்சூழல் தினம் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழ்நாட்டில்பல லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளனர். நீடாமங்கலம் கிரீன் நீடா அமைப்பு வடுவூர் எரியில் ஆயிரம் மரக்கன்றுகளை வைத்து பராமரிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் குளமங்கலம் உறவு இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் கிராமம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் வளாகத்தில் 200 மரக்கன்றுகளை வைத்து தொடங்கினார்கள். ஒவ்வொரு கன்றுக்கும் தண்ணீர் குழாய்கள் புதைக்கப்பட்டது. தொடர்ந்து பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.