தொடர் எதிர்ப்பால் பணிகள் நிறுத்தம்
தஞ்சாவூர் ஜூன்.1-தஞ்சாவூர் நகரில் மட்டும் நாளொன்று க்கு சுமார் 80 டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் சீனிவாசபுரம் அருகே செக்கடியில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வாயிலாக நகரில் சேகரமாகும் குப்பைகளை அதே பகுதியில் பிரித்து எடுக்க மாநகராட்சி முடிவு செய்தது.மாநகரில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என்று பிரித்து வாங்கவும், மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து விற்பனை செய்யவும், மக்காத குப்பைகள் அரியலுார் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளது. கரந்தை, அருளானந்த நகர், ரகுமான் நகர், ராஜீவ் நகர், மாரிகுளம், கீழவாசல் உள்ளிட்ட 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடங்கள் எல்லாம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாநகராட்சியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களாகும். இந்த இடங்களில் குப்பைகளை தேக்கி வைத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதில் சனிக்கிழமை காலை தொல்காப்பியர் சதுக்கம் அருகே ராஜீவ் நகரில் சிறுவர் விளையாட்டு திடலில் குப்பை கிடங்கு அமைக்க மாநகராட்சி அலுவலர்கள் ஜேசிபி மூலம் குழி தோண்டினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் விளையாட்டு எதிர்ப்புத் தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினர். இந்த இடத்தில் புதிய நீர்த்தேக்கத் தொட்டியும், விளையாட்டு பூங்கா, குடியிருப்புகள் அதிகளவில் இருப்பதால் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை அமைக்க கூடாது என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு சென்றனர்.மேலும் இதே போல் கீழவாசல் ரகுமான் நகரிலும் மாநகராட்சி இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பணிகளை பாதியிலேயே மாநகராட்சி பணியாளர்கள் நிறுத்தினர்.