tamilnadu

முசிறி முக்கிய செய்திகள்

முசிறி கல்வி மாவட்டத்தில் 74 பள்ளிகளுக்கு நோட்டு- புத்தகம்

முசிறி, ஜூன் 2-முசிறி கல்வி மாவட்டத்தில் உள்ள 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள 74 பள்ளிகளுக்கு 3-ந் தேதி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிட நோட்டு புத்தகங்கள் கல்வித்துறை அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை அன்று கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கான நோட்டு புத்தகங்கள் பாடவாரியாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முசிறி கல்வி மாவட்டத்தில் உள்ள 74 பள்ளிகளுக்கு 6 முதல் 10 வகுப்பு வரை 72 ஆயிரத்து 183 புத்தகங்களும், 1 இலட்சத்து 49 ஆயிரத்தி 100 நோட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நோட்டு புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளே மாணவ, மாணவிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின்னர் திங்கட்கிழமை பள்ளி திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். 

அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற தனியார் பள்ளி வாகனங்களுக்கு அறிவுறுத்தல்  
 

முசிறி, ஜூன் 2-முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளி வாகனங்களை இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா முன்னிலை வகித்தார். அப்போது இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வில் தகுதி குறைந்த 30 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பள்ளி வாகனங்களில் குழந்தைகளை அழைத்து செல்வதால் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.சாலை விதிகளை டிரைவர்கள் கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகம் கூடாது. அளவுக்கு மீறி வாகனங்களில் குழந்தைகளை ஏற்ற கூடாது. குழந்தைகளை ஏற்றவும், இறக்கிவிடவும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கைக்கு பரிதுரைக்கப்படும் என்று கூறினார். 

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு  

முசிறி, ஜூன் 2-தனியார் பள்ளி வாகனங்களை முசிறி கோட்டாட்சியர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் 3-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் முசிறி அருகே எம்.ஐ.டி கல்வி நிறுவன வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. முசிறி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். முசிறி கல்வி மாவட்ட அலுவலர் செல்வி, வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வாகனங்கள் தகுதியாக உள்ளதா, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர கால வழி, வாகனங்களுக்கான தரச்சான்றிதழ் குறித்தும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதில் 26 பள்ளிகளை சேர்ந்த 122 வாகனங்கள் வர பெற்றன. ஆய்வில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களிடம் வாகனங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிப்பு அழைத்து சென்று வர வேண்டும், அதிவேகமாக வாகனங்கள் இயக்க கூடாது, மது அருந்தி வாகனம் ஓட்டக் கூடாது. சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தா.பேட்டையில் ரத்ததான முகாம்  

முசிறி, ஜூன் 2-தா.பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.    முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் குமரேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீநிவாஸ், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் இக்ரம், வர்த்தக சங்க தலைவர் நந்தகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் ரத்ததானம் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினர். முகாமில் 30 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தாரா சமூக மேம்பாட்டு மையம், வைசிய சங்கம குழுவினர், வர்த்தக சங்கத்தினர் முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.