tamilnadu

மன்னார்குடி ,தஞ்சாவூர் மற்றும் அரியலூர் முக்கிய செய்திகள்

மன்னார்குடியில் குடிநீர் விநியோகம் ரத்து

மன்னார்குடி, ஜூன் 14- திருவாரூர் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி பகுதிகளில் வரும் 17,18 தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.  வேதாரண்யம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பாபநாசம் ஒன்றியம், அண்டக்குடி காவிரி ஆற்று பாலக் குழாயில் மற்றும் மணிக்கரையூர் பாலக் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் அந்த 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இதனால் திருவாரூர், திருத்துறைப்பூண்டி நகராட்சி, முத்துப்பேட்டை பேரூராட்சி, நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொள்ள வேண்டும் என  குடிநீர் வாரிய ஊரக குடிநீர் திட்டக் கோட்ட நிர்வாகப் பொறியாளர்(பொ) ந.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

உடையநாட்டில் புதிய பள்ளிவாசல் திறப்பு  

தஞ்சாவூர் ஜூன்.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் உடையநாடு கிராமத்தில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி முதல் நாள் புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், உடையநாடு சுபைதா அம்மாள் அரபிக் கல்லூரி மாணவி அஸ்மியா பிந்தி முஹம்மது ஜவாஹிர் கிராஅத் ஓதினார். ஏ.யாஸ்மின் ஆலிமா,  பட்டிமன்ற பேச்சாளர் ஜெ.சுல்தானா பர்வீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.  வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏ.சைகுல் அரபி ஆலிம், நூரி சித்திகிய்யு கிராஅத் ஓதினார். கேரளா மவ்லவி முஹம்மது இப்றாஹிம் அன்வாருல்லாஹ் ஷாஹ் ஜூம்ஆ உரையாற்றினார். மவ்லவிகள் எம்.முஹம்மது அபுதாஹிர் ஹஜரத் பாகவி, எஸ்.முஹம்மது ஷரீப் ஹஜரத் மிஸ்பாஹி, எம்.முஹம்மது முஸ்தபா, பாஜில் அன்வாரி, பேராவூரணி வட்டார ஜமாஅத்துல் உலமாக்கள் சபை நிர்வாகிகள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உடையநாடு ஜமாஅத் தலைவர் எம்.ஜெயினுல் ஆபிதீன் புதிய பள்ளிவாசலை வக்பு செய்து வைத்தார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச் செயலாளரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர், தொழிலதிபர் ஏஷியன் ஹெச்.சம்சுதீன், பேராவூரணி வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், அதிமுக நகர மாணவரணி செயலாளர் கோவி.இளங்கோ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ஜபார் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை உடையநாடு ஜமாஅத்தார்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர். 

விவசாயிகளுக்கு நீராபானம் தயாரிப்பு பயிற்சி  

தஞ்சாவூர் ஜூன்.14- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வேளாண் துறையின் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் சென்னையில் நீராபானம் தயாரிப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில்  பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் எஸ்.சங்கீதா தலைமை வகித்து பேசினார். நிகழ்வில் தஞ்சாவூர் வேளாண் அலுவலர்(விற்பனை மற்றும் வணிகம்) ஆர்.தாரா, 'நீரா பானம் தயாரிப்பு முறைகள், மரம் தேர்வு, உரிமம் பெறுதல், குழுக்கள் அமைத்தல் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.  மாநில தென்னை ஒட்டுப் பணி மைய பட்டுக்கோட்டை வேளாண்மை அலுவலர் ஜி.பார்வதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி.சுகிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி, ரமேஷ் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திறப்பு விழா  

அரியலூர், ஜூன் 14- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் புதிய வீட்டினை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை, எம்.ஜெயசீலன் ஆகியோர் திறந்து வைத்து பாராட்டினார். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல் தலைமைவகித்தார். ஒன்றியக்குழ ஊறுப்பினர் சி.உத்திராபதி வரவேற்றார். ஜெயங்கொண்டம் வேளாண் உதவி இயக்குனர் எம்.இளவரசன் ஊர்காவல் படைவட்டார தளபதி கே.ராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் எஸ்.என்.துரைராஜ், மாதர்சங்க மாவட்ட செயலாளர் பி.பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கட்சியின் ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். 

24 மணி நேர வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் 

புதுக்கோட்டை, ஜூன்.14- தமிழகத்தில் மூன்று ஆண்டுக்கு 24 மணிநேரமும் கடைகள் மற்றும்  வணிக நிறுவணங்களை இயக்கிட அனுமதிக்கலாம் என்று புதிய அரசாணையை தமிழக அரசு வெளிட்டுள்ளது. இதன்படி 24 மணி நேர நிறுவனங்கள் அல்லது கடைகள் குறைந்தது 10 ஊழியர்களை கொண்டிருக்க வேண்டும், ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் மேலும், விடுமுறை அளிக்கும் நாள் குறித்த விவரங்களை கடைகள், வணிக நிறுவனங்களில் வெளிப்படையாக தெரியும் வகையில் ஒட்டப்பட வேண்டும், கூடுதல் நேரத்தில் பணியாற்றினால் அதற்கான தொகை உள்ளிட்டவற்றை சேமிப்பு பணியாளர்களின் கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும்.  பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் அதற்குரிய சட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும் தனியாக குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்டவை நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் ஆகும். இவற்றை கடைபிடிக்காத நிறுவனங்ககள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) செங்குலம் காலணி, திருச்சி என்ற முகவரியிலோ, 0431- 2311343 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம், பெரியார்நகர், ராஜகோபாலபுரம், புதுக்கோட்டை என்ற முகவரியிலோ நேரில் அணுகலாம் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.